தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்ட நிலையில் அரசு அலுவலர்கள் கடைபிடிக்க வேண்டி வழிகாட்டு நெறிமுறை: தேர்தல் ஆணையம் வெளியீடு

சென்னை: தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்ட நிலையில் அரசு அலுவலர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
1. விளம்பரங்களை அகற்றுவதற்கான காலக்கெடு:
* அரசு இடங்கள்: தேர்தல் அறிவிக்கப்பட்ட 24 மணி நேரத்திற்குள்.
* பொது இடங்கள்: (ரயில் நிலையம், பேருந்து நிலையங்கள், விமான நிலையங்கள், இரயில்வே பாலங்கள், சாலைகள், அரசு பேருந்துகள், மின்சாரம், தொலைபேசி கம்பங்கள்): 48 மணி நேரத்திற்குள்.
* தனியார் இடங்கள்: 72 மணி நேரத்திற்குள்.

2. அரசு கட்டிடங்கள் மற்றும் அரசு வாகனங்கள் கட்டுப்பாடுகள்:
* தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளின் (எம்.எல்.ஏ / எம்.பி) அலுவலகங்களைப் பூட்டி பொதுப்பணித்துறை வசம் சாவி ஒப்படைக்கப்பட வேண்டும்.
* அரசு விருந்தினர் மாளிகைகளில் எந்த ஒரு அரசியல் கட்சியினரும் அனுமதிக்கப்படக் கூடாது.
* தேர்தல் பிரச்சாரம் அல்லது தேர்தல் தொடர்பான பயணங்களுக்கு எந்தவொரு அரசியல் கட்சியோ, வேட்பாளரோ அல்லது தேர்தல் தொடர்பான நபர்களோ அரசு வாகனங்களைப் பயன்படுத்த முழுமையான தடை விதிக்கப்படுகிறது.
* தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் மற்றும் வாரியத் தலைவர்கள் ஆகியோர் உபயோகப்படுத்தும் அரசு வாகனங்களை திரும்பப் பெற வேண்டும்.

3. அரசு அலுவலகங்கள் மற்றும் அரசு இணையதளங்களில் புகைப்படங்கள்/ செய்திகள்:
* தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்ட நாள் முதல் எந்த ஒரு அரசு அலுவலகங்களிலும் அரசியல் சார்ந்த படங்கள், காலண்டர்கள், நலத்திட்ட ஸ்டிக்கர்கள், பிரதமர், முதலமைச்சர், அமைச்சர்களின் படங்கள் வைத்துக் கொள்ளக் கூடாது. அவை உடனடியாக அகற்றப்பட வேண்டும்.
* அரசு இணையதளங்கள் மற்றும் கட்டிடங்களில் உள்ள அமைச்சர்கள் அல்லது அரசியல் தலைவர்களின் புகைப்படங்கள் மற்றும் சாதனைகள் குறித்த செய்திகளை நீக்க வேண்டும் அல்லது மறைக்க வேண்டும்.

4. நலத்திட்டங்கள்:
* துறை சார்ந்த நலத்திட்ட விழாக்கள் நடத்திட அனுமதி இல்லை.
* சிறப்பு மருத்துவ சிகிச்சை மற்றும் கால்நடைகள் மருத்துவ சிகிச்சைகளின் போது விளம்பர பேனர்கள் வைத்திருக்கக் கூடாது.

5. கூட்டங்கள்:
* மக்கள் குறைதீர் நாள் மனுக்கள் மற்றும் இதர மனுக்கள் பெறும் நிகழ்வுகள் தடை செய்யப்படுகிறது.
* மாநிலங்களின் முதலமைச்சர்கள், அமைச்சர்கள் மற்றும் ஒன்றிய, மாநில அரசுகளின் பிற அரசியல் பிரமுகர்கள் மற்றும் அலுவலர்களுக்கிடையே தனித்தனியாக அல்லது கூட்டாக காணொலி காட்சி மூலம் ஆய்வுகள் நடைபெறக்கூடாது.

6. அரசு விளம்பரங்கள் வழிகாட்டுதல்கள்:
* அரசியல் தலைவர்களை மிகைப்படுத்தும் விளம்பரங்கள் மற்றும் ஒரு கட்சிக்கு ஆதரவான விளம்பரங்கள் உருவாக்குவதைத் தவிர்க்க வேண்டும்.
* அரசு செய்திகளை திறம்பட கொண்டு சேர்க்கத் தேவைப்பட்டால் மட்டுமே குடியரசுத் தலைவர் அல்லது பிரதமரின் புகைப்படங்களை பயன்படுத்தலாம்.

7. திட்டங்கள் செயல்படுவதற்கான கட்டுப்பாடுகள் பின்வருமாறு:
அ) தொடரக்கூடிய பணிகள்:
பின்வரும் பணிகளைத் தேர்தல் ஆணையத்தின் முன்அனுமதி இன்றி அரசு முகமைகள் தொடரலாம்:
* முழு நிதியுதவி ஒதுக்கீடு செய்யப்பட்டவை
* நிர்வாக, தொழில்நுட்ப மற்றும் நிதி ஒப்புதல்கள் பெறப்பட்டவை.
* டெண்டர் அறிவிக்கப்பட்டு மதிப்பீடு செய்யப்பட்டு வழங்கப்பட்டுள்ள இனங்கள்.
* ஒத்திவைக்க முடியாத இதய அறுவை சிகிச்சை, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை, புற்றுநோய் சிகிச்சை போன்ற பல்வேறு நேர வரையறை கொண்ட சிகிச்சைகளுக்கு பிரதமரின் நிவாரண நிதி அல்லது முதலமைச்சரின் நிவாரண நிதியின் கீழ் மருத்துவ உதவியைத் தொடர்புடைய அரசு அதிகாரிகள் அல்லது தனியார் மருத்துவமனைகளின் தலைவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நோயாளிகளுக்கு வழங்குதல்.

ஆ). புதிய பணிகள் (நிபந்தனைகளுக்கு உட்பட்டவை):
* புதிய திட்டங்கள், சலுகைகள் அல்லது நிதி உதவித் தொகைகளை அறிவிப்பது அல்லது அதற்கான வாக்குறுதிகள் அளிப்பது அல்லது அடிக்கல் நாட்டுதல் போன்றவை தடைசெய்யப்பட்டுள்ளன.
பின்வரும் நடவடிக்கைகளுக்குத் தேர்தல் ஆணையத்தின் முன்அனுமதி கட்டாயம்:
* எந்தவொரு விருப்ப அதிகார நிதியிலிருந்தும் புதிய பணிகளையோ திட்டங்களையோ தொடங்குதல்.
* தற்போதுள்ள திட்டங்களின் செயல்பாட்டுப் பகுதியை விரிவுபடுத்துதல்.
* தனிநபருக்கோ அல்லது நிறுவனங்களுக்கோ அரசு நிலம் ஒதுக்கீடு செய்தல்.
* சர்வதேச டெண்டர்கள் தவிர்த்து, ஏற்கனவே விடப்பட்ட மற்ற டெண்டர்களை இறுதி செய்தல் (மதிப்பீடு செய்யலாம், ஆனால் இறுதி செய்யக்கூடாது). டெண்டர்கள் இதுவரை விடப்படவில்லை எனில், அனுமதி இன்றி வெளியிடக்கூடாது.
* பிரதமரின் அல்லது முதலமைச்சரின் நிவாரண நிதியிலிருந்து குறிப்பிட்ட குழுவினருக்கு எந்தவித தேர்ந்தெடுக்கப்பட்ட உதவியும் வழங்குவதற்கும் ஆணையத்தின் முன்அனுமதி தேவை.

8. பணி நியமனக் கட்டுப்பாடுகள்:
* தற்காலிகப் பணி நியமனங்கள் செய்யக்கூடாது.
* சட்டரீதியற்ற அமைப்புகள் (Non-statutory bodies) மூலம் மேற்கொள்ளப்படும் நியமனங்களுக்குத் தேர்தல் ஆணையத்தின் முன்அனுமதி பெற வேண்டும்.
* அரசின் புதிய நலத்திட்டங்களைத் தொடங்குதல் மற்றும் புதிய பயனாளிகள் தேர்வு செய்தல் நிறுத்தி வைக்கப்படுகிறது.

9. தேர்தல் தொடர்பான அதிகாரிகளை இடமாற்றம் செய்யத் தடை:
* தேர்தல் பணிகள் தொடர்புடைய அலுவலர்களின் பணியிடமாற்றம்.
* மாவட்ட தேர்தல் அலுவலர்கள், தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் தேர்தல் நடத்துதலுடன் தொடர்புடைய பிற வருவாய் அலுவலர்கள்.
* மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951 இன் பிரிவு 28A இன் கீழ் சரக ஐஜி-க்கள் மற்றும் டிஐஜிக்கள், மூத்த காவல்துறை கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர்கள், துணைக் காவல் கண்காணிப்பாளர்கள் போன்ற துணைப் பிரிவு அளவிலான காவல்துறை அதிகாரிகள் மற்றும் ஆணையத்திற்குப் பணியமர்த்தப்பட்ட பிற காவல்துறை அதிகாரிகள் போன்ற தேர்தல் நிர்வாகத்துடன் தொடர்புடைய காவல் துறை அதிகாரிகள்.
* தேர்தல் பணிகளுக்காக நியமிக்கப்பட்ட பிற அலுவலர்கள், மண்டல அலுவலர்கள், போக்குவரத்துப் பிரிவு, வாக்குப்பதிவு பொருட்கள் கொள்முதல் மற்றும் விநியோகப் பிரிவு, பயிற்சி பிரிவு, அச்சு பிரிவு போன்றவை தேர்தல் நிர்வாகத்தில் பங்கு வகிக்கும் மூத்த அலுவலர்களும் இந்த வழிகாட்டுதல்களுக்கு உட்பட்டவர்கள்.
* இந்தத் தடை தேர்தல் செயல்முறை முடிவடையும் வரை செயல்பாட்டில் இருக்கும்.
* இந்த காலகட்டத்தில், அரசு / பொது நிறுவனங்களில் எந்த நியமனங்கள் அல்லது பதவி உயர்வுகள் தேர்தல் ஆணையத்தின் முன் அனுமதி இல்லாமல் செய்யப்படக் கூடாது.

10. எம்.பி / எம்.எல்.ஏ தொகுதி மேம்பாட்டு நிதி மற்றும் விருப்ப அதிகார நிதி கட்டுப்பாடுகள்:
* மாதிரி நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும் காலத்தில், MPLAD திட்டத்தின் கீழ் எந்த ஒரு புதிய திட்டத்திற்கும் அனுமதி அளிக்கக்கூடாது என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இருப்பினும், ஒரு பணி ஏற்கனவே களத்தில் தொடங்கப்பட்டிருந்தால், அதைத் தொடர்ந்து நடத்தலாம்.
* தேர்தல் நடைபெறும் நாட்டின் எந்தப் பகுதியிலும் MPLAD (மாநிலங்களவை உறுப்பினர்கள் உட்பட) நிதியின் கீழ் புதிய நிதி விடுவிப்பு செய்யப்படக்கூடாது.
இதேபோல், எம்.எல்.ஏ / எம்.பி தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழும் புதிய நிதி விடுவிப்புகள் தேர்தல் முடியும் வரை செய்யப்படக்கூடாது.
* முடிவடைந்த பணிகளுக்கான தொகையை விடுவிப்பதற்குத் தடை ஏதுமில்லை.
* திட்டங்கள் அங்கீகரிக்கப்பட்டு, நிதி ஒதுக்கப்பட்டு, பொருட்கள் தளத்திற்கு வந்து சேர்ந்திருந்தால், அத்திட்டத்தை நிலத்தவறாமல் செயல்படுத்தலாம்.

11. கடன் தள்ளுபடி மற்றும் வாராக்கடன்கள்:
* மாநில அரசால் முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ நிதியளிக்கப்படும் நிதி நிறுவனங்கள், தனிநபர்கள் அல்லது நிறுவனங்களுக்கு வழங்கிய கடன்களைத் தள்ளுபடி செய்யக்கூடாது.
* தேர்தல் ஆணையத்தின் முன்அனுமதியின்றி எதையும் தள்ளுபடி செய்யக்கூடாது மற்றும் புதிய கடன்களை வழங்கக்கூடாது.

12. பொது நிதியில் விளம்பரங்கள் வெளியிடுதல்:
* ஆளும் கட்சியின் சாதனைகளை விளம்பரப்படுத்துவதற்கும் அதன் தேர்தல் வாய்ப்புகளை மேம்படுத்துவதற்கும் அரசு நிதியைப் பயன்படுத்துவதை நடத்தை விதிகள் கட்டுப்படுத்துகின்றன.
* உலக இருப்பிட நாள் (World Habitat Day), போலியோ சொட்டு மருந்து, எய்ட்ஸ் விழிப்புணர்வு போன்ற சிறப்பு தின விளம்பரங்களை வெளியிடத் தடை இல்லை, ஆனால் அவற்றில் புகைப்படங்களைப் பயன்படுத்தக்கூடாது.

13. பள்ளி மைதானங்களை பிரச்சாரத்திற்குப் பயன்படுத்துதல் – விதிமுறைகள்:
* கல்விச் செயல்பாடுகள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளின் கல்வி அட்டவணை அல்லது வகுப்புகள் எந்த வகையிலும் பாதிக்கப்படக்கூடாது.
* எந்தவொரு அரசியல் கட்சியும் இத்தகைய மைதானங்களைத் தனது சொந்தக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரவோ அல்லது முற்றுரிமை பெறவோ கூடாது. அனைத்துக் கட்சிகளுக்கும் சம வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்.

Related Stories: