திருமலை: தெலங்கானாவில் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பிய போக்குவரத்து ஊழியர்கள் பணி செய்ய அனுமதி மறுக்கப்பட்டனர். ஆனால் தடையை மீறி பணிமனைக்குள் செல்ல முயன்றவர்களை போலீசார் கைது செய்தனர்.தெலங்கானா மாநிலத்தில் போக்குவரத்து துறையை தனியார் மயமாக்கக்கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து ஊழியர்கள் கடந்த 52 நாட்களாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் வேலை நிறுத்தத்தை கைவிட்டுவிட்டு நேற்று முதல் பணிக்கு திரும்ப முடிவு செய்தனர். இதுகுறித்து நேற்று முன்தினம் ஐதராபாத்தில் நடந்த கூட்டத்திற்கு பின் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு தலைவர் அஸ்வத்தாமா கூறுகையில், ‘‘பணிக்கு திரும்பும் போக்குவரத்து கழக ஊழியர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது. எங்களது கோரிக்கைகளை அரசு பரிவுடன் கவனிக்க வேண்டும்’’ என்று கேட்டுக் கொண்டார்.இந்நிலையில் போராட் டத்தை கை விட்ட போக்குவரத்து கழக தொழிலாளர்கள் அனைவரும் நேற்று பணியில் சேருவதற்காக தங்கள் பணிமனை முன் குவிந்தனர். ஆனால் அங்கிருந்த அதிகாரிகள், ‘‘உங்களை பணியில் சேர்ப்பது குறித்து எந்த அறிவிப்பும் அரசு சார்பில் வெளியிடவில்லை. யாரையும் பணியில் சேர்க்க முடியாது’’ எனக்கூறி பணிமனை வாசலிலேயே தடுத்து நிறுத்தினர்.
இதற்கு போக்குவரத்து ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் செய்ய முயன்றனர்.