சேலம்: சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள பாகல்பட்டி செக்கானூரை சேர்ந்தவர் ராஜசேகர்(42). திருமணமாகாதவர். அதேபகுதியில் உள்ள தோளூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் காசாளராக (கேசியர்) பணியாற்றி வந்தார். நேற்று காலை வங்கி ஊழியர்கள், வளாகத்திலுள்ள கூட்டுறவு சங்கத்திற்கு சொந்தமான உரக்குடோனை திறந்து பார்த்தனர். அப்போது, அங்கு ராஜசேகர் தூக்கில் சடலமாக தொங்கினார். தகவலின்பேரில் வந்த ஓமலூர் போலீசார் நடத்திய விசாரணையில், நேற்று முன்தினம் வங்கிக்கு விடுமுறையாக இருந்தபோதும் ராஜசேகர் வங்கிக்கு வந்து, தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளது தெரியவந்துள்ளது. ராஜசேகர் எழுதிய கடிதம் ஒன்று போலீசாரிடம் சிக்கியது. அதில்,அவர் கூறியிருப்பதாவது: எனது சாவுக்கு கடன் சுமையும், பணிச்சுமையுமே காரணம். முதலில் என் தம்பி மூலமாக கடன் வந்தது. நான் வேலை செய்யும் இடம், 2002ம் ஆண்டு பதவி உயர்வு வழங்கியதில் சங்கத்தின் தற்போதைய செயலாளர் செய்த தவறு என்னை மிகப்பெரிய அளவு பாதித்தது. அப்போது இருந்த தனி அலுவலர், என்னை மிரட்டி பணிய வைத்தார். எந்தவொரு அதிகாரியிடமும் எனது கோரிக்கை எடுபடவில்லை.