சுகாதாரமாகவும், தரத்துடனும் அன்னதானம் தயாரிப்பு; 314 கோயில்களுக்கு உணவு தர பாதுகாப்பு சான்றிதழ்: அமைச்சர் பி.கே.சேகர்பாபு தகவல்

சென்னை: இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: பழநி தண்டாயுதபாணிசுவாமி கோயில், மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் உள்பட 10 கோயில்களுக்கு வரும் பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கும் திட்டம் கடந்த ஏப்.23ம் தேதி தொடங்கி வைக்கப்பட்டது. 2022-23ம் ஆண்டிற்கான சட்டமன்ற மானியக் கோரிக்கையில் மேலும் 5 கோயில்களுக்கு இத்திட்டம் விரிவுப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, விரிவுபடுத்தப்பட்ட இத்திட்டம் நவ.1ம் தேதி சென்னை, மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில், மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில், இருக்கன்குடி மாரியம்மன் கோயில், பொள்ளாச்சி, ஆனைமலை மாசாணியம்மன் கோயில், நாமக்கல் நரசிம்ம சுவாமி கோயில் ஆகிய கோயில்களில் தொடங்கி வைக்கப்பட்டு நாள் முழுவதும் பிரசாதம் வழங்கப்பட்டு வருகிறது.இத்திட்டத்தின் மூலம் மேற்கண்ட 15 கோயில்களில் சாதாரண நாட்களில் சுமார் 75 ஆயிரம் பக்தர்களுக்கும், சிறப்பு நாட்களில் சுமார் 1,10,000 பக்தர்களுக்கும் பிரசாதங்களாக வெண்பொங்கல், சர்க்கரை பொங்கல், புளியோதரை, லெமன்சாதம், தயிர்சாதம், லட்டு போன்றவை வழங்கப்பட்டு வருகின்றன.கோயில்களில் தயாரிக்கப்படும் பிரசாதம் மற்றும் அன்னதானம் தரத்துடனும், சுகாதாரமான முறையிலும் தயாரிக்கப்படுவதை உறுதி செய்திடும் வகையில் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரப்படுத்துதல் ஆணையத்தால் உணவு தர பாதுகாப்புச் சான்றிதழ் 314 கோயில்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது….

The post சுகாதாரமாகவும், தரத்துடனும் அன்னதானம் தயாரிப்பு; 314 கோயில்களுக்கு உணவு தர பாதுகாப்பு சான்றிதழ்: அமைச்சர் பி.கே.சேகர்பாபு தகவல் appeared first on Dinakaran.

Related Stories: