நடிகை கங்கனா ரனவத் சமூக வலைத்தள பக்கங்களில் அன்றாட சமூக, அரசியல் நிகழ்வுகள் குறித்து கருத்துகளை வெளியிடுவார். நடிகர் சுஷாந்த் தற்கொலைக்கு காரணமான குற்றவாளிகளை மகாராஷ்டிரா அரசு காப்பாற்றுகிறது என்று அவர் கூறிய கருத்தால் அந்த மாநில அரசுடன் நேரடியாக மோதினார். மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் மசோதாவை கண்டித்து நாடு முழுவதும் விவசாயிகள் போராட்டம் நடத்தியபோது, அவர்களின் போராட்டம் குறித்து விமர்சித்திருந்தார் கங்கனா. அவர் கூறும்போது, ‘குடியுரிமை திருத்த சட்ட மசோதா அமலுக்கு வந்தபோது சில தீவிரவாத அமைப்புகள் அரசுக்கு எதிரான போராட்டத்தை தூண்டிவிட்டது. அதேபோன்ற தீவிரவாதம்தான் வேளாண் மசோதாவுக்கு எதிராகவும் போராட்டத்தை தூண்டி விடுகிறது’ என்று கூறியிருந்தார்.