உடன்குடி: மைசூருக்கு அடுத்தபடியாக தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா ஆண்டுதோறும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு தசரா திருவிழா கடந்த 10ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவிழாவில் 10 நாட்களும் இரவில் அம்மன் பல்வேறு வேடமணிந்து வீதியுலா வரும் வைபவம் நடந்து வருகிறது. 10ம் திருவிழாவான இன்று (19ம் தேதி) காலை 10.30 மணிக்கு அம்மனுக்கு மகா அபிஷேகமும், இரவு 11 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜையும், நள்ளிரவு 12 மணிக்கு விழாவின் சிகர நிகழ்ச்சியாக அம்மன் சிம்ம வாகனத்தில் கடற்கரை சிதம்பரேசுவரர் கோயிலுக்கு முன்பு எழுந்தருளி மகிசா சூரசம்ஹாரம் நடக்கிறது.