தசரா திருவிழா களைகட்டியது : குலசை முத்தாரம்மன் கோயிலில் இன்று மகிஷா சூரசம்ஹாரம்

உடன்குடி: மைசூருக்கு அடுத்தபடியாக தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா ஆண்டுதோறும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு தசரா திருவிழா கடந்த 10ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவிழாவில் 10 நாட்களும் இரவில் அம்மன் பல்வேறு வேடமணிந்து வீதியுலா வரும் வைபவம் நடந்து வருகிறது. 10ம் திருவிழாவான இன்று (19ம் தேதி) காலை 10.30 மணிக்கு அம்மனுக்கு மகா அபிஷேகமும், இரவு 11 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜையும், நள்ளிரவு 12 மணிக்கு விழாவின் சிகர நிகழ்ச்சியாக அம்மன் சிம்ம வாகனத்தில் கடற்கரை சிதம்பரேசுவரர் கோயிலுக்கு முன்பு எழுந்தருளி மகிசா சூரசம்ஹாரம் நடக்கிறது.

இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர். இதற்காக நேற்று முன்தினம் முதலே பக்தர்கள் குலசேகரன்பட்டினத்தில் குவிந்த வண்ணம் உள்ளனர். 11ம் திருநாளான 20ம் தேதி அதிகாலை 1 மணிக்கு சூரசம்ஹாரம் முடிந்தவுடன் கடற்கரை மேடைக்கு அம்மன் எழுந்தருளி அபிஷேக ஆராதனையும், அதிகாலை 2 மணிக்கு அம்மன் சிதம்பரேஸ்வரர் கோயிலுக்கு முன்பு சாந்தாபிஷேக ஆராதனையும் நடக்கிறது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் இணைஆணையர் பரஞ்ஜோதி, தக்கார் ரோஜாலி சுமதா, செயல் அலுவலர் ராமசுப்பிரமணியன் ஆகியோர் செய்து வருகின்றனர்.

Related Stories: