ஆக்‌ஷன் த்ரில்லர் இயக்கினால்தான் மரியாதை: இயக்குனர் ஆதங்கம்

விஜய் ஜேசுதாஸ், அம்ரிதா நடித்த படைவீரன் படத்தை இயக்கியவர் தனா. அடுத்து மணிரத்னம் தயாரிப்பில்  வானம் கொட்டட்டும் படத்தை இயக்கி உள்ளார். அவர் கூறியதாவது: வெற்றிமாறனின் அசுரன் படம் பற்றி பரபரப்பாக பேசப்பட்டது. அதற்கு முன்பு சாதி பாகுபாடு பற்றி பேசிய படமாக படைவீரன் இயக்கியிருந்தேன். இப்படத்துக்கு நல்ல விமர்சனம் கிடைத்திருந்தாலும் வணிக ரீதியாக  வெற்றி பெறவில்லை. ஆனால் படைவீரன் பற்றி அடிக்கடி தனுஷ் என்னிடம் பாராட்டி சொல்வார். எந்தவொரு கதையாக இருந்தாலும் அதற்கு ஹீரோவும் முக்கியம் என்பதை படைவீரன் மூலம் தெரிந்துகொண்டேன்.

வானம் கொட்டட்டும் பட கதையை மணிரத்னம் சாரும், நானும் இணைந்து பேசி உருவாக்கினோம். இப்படத்தை அவரே இயக்குவதாக இருந்தது. அந்த நேரத்தில் பொன்னியின் செல்வன் படத்தை இயக்க திடீரென முடிவு எடுத்தார். இதையடுத்து வானம் கொட்டட்டும் படத்தை இயக்கும் பொறுப்பை என்னிடமே வழங்கினார். அப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. சரத்குமார், ராதிகா, விக்ரம் பிரபு,  ஐஸ்வர்யா ராஜேஷ், மடோனா. சாந்தனு, அமிதாஸ், பாலாஜி சக்திவேல் என எல்லோருமே சிறப்பாக நடித்திருந்தனர்.

கோலிவுட்டில் ஆக்‌ஷன் த்ரில்லர் கதையை இயக்கினால்தான் இயக்குனர் என்று ஒப்புக்கொள்கிறார்கள். அதைத் தவறு என்று கூறவில்லை. ரசனை அப்படியிருக்கிறது. எனது அடுத்த படம் ஆக்‌ஷன் த்ரில்லராக உருவாகிறது. இதுவரை இல்லாத புதிய களத்தில் அப்படம் இருக்கும்’ என்றார்.

Related Stories: