ஆனைமுகனின் அறுபடை வீடுகள்

முருகப் பெருமானுக்கு அறுபடை வீடுகள் இருப்பதைப்போல பிள்ளையாருக்கும் அறுபடை வீடுகள் உண்டு. பிள்ளையார் நிகழ்த்திய அற்புதங்களை கொண்டு இத்தலங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.

பிள்ளையார்பட்டி

கற்பக விநாயகர்

ஊரின் பெயரே இறைவனின் திருப்பெயரால் அழைக்கப்படும் பெருந்தலம் இது. ராஜகோபுரங்களோடு கூடிய பொலிவு மிக்க தலமாக விளங்குகிறது. சுமார் 1600 ஆண்டுகளுக்கு முன்பு அமைந்த கோயில் இது. திருவீங்கைக்குடி மாகாதேவர் எனும் திருவீசர் ஈசனாக அருளும் மகத்தான ஆலயமாகவும் இது விளங்குகிறது. இந்த ஆலயத்தில் குடைவரை அமைப்பிற்குள் கற்பக விநாயகர் அருட்காட்சி தருகிறார். பிள்ளையார்பட்டியில் அருளும் பிள்ளையார், வலம்புரியாக இருப்பதால் மிகுந்த தத்துவம் பொதிந்த மூர்த்தமாக கருதப்படுகிறது. ஓங்கார ஒலியின் வரிவடிவம்தாம் `ஓம்’ என்பதாகும். வலப்புற தந்தம் ஒடிந்ததான அமைதியில் காட்டப் பெறுவதன் மூலம் `ஓ’ என்ற எழுத்தின் தொடக்கச் சுழி கிடைத்து விடுகிறது. அங்கிருந்து மேல்நோக்கி வலஞ்சுழித்து இடக்காது வரை சென்று வளைந்த இடத்தந்தத்தின் வழியாக கீழ்நோக்கிக் துதிக்கை நுனிவரை கோடிட்டால் `ஓ’ என்ற வடிவம்

தோன்றுவதை காணலாம். கையிலுள்ள மோதகம்தான் ‘ம்’ என்ற வரிவடிவத்தை உணர்த்துகிறது. இவ்வாறு வலம்புரி பிள்ளையாராக அருள்வதால் மற்ற மூர்த்தங்களை விட சிறப்பு பெற்றதாக விளங்குகிறார். மற்ற தலங்களில் இருப்பதைப்போல நான்கு கைகள் இல்லாமல் இரண்டு கரங்களோடு விநாயகர் அருள்கிறார். அங்குச பாசங்கள் இல்லாமலும் இருக்கிறார். வயிறு ஆசனத்தில் படியாமல் அர்த்தபத்ம ஆசனம் போன்று கால்கள் மடிந்திருக்க அமர்ந்தருள்கிறார். இடக் கரத்தை கடிஹஸ்தமாக இடையில் நாட்டிப் பெருமிதக் கோலத்தில் தோன்றுகிறார். இறுதியாக வலக்கரத்தில் மோதகத்தை தாங்கியருளுகிறார். பிள்ளையார் வணக்கம் தமிழகத்தில் தோன்றிய ஆதிநாளிலேயே இந்த மூர்த்தம் அமைக்கப்பட்டது. இந்த கற்பக விநாயகரை தரிசிக்க வாழ்வு வளம் பெறும். காரைக்குடியிலிருந்து 16 கி.மீ. தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது.

விருத்தாசலம் ஆழத்துப்

பிள்ளையார்

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில், விருத்தாம்பிகை-பாலாம்பிகை சமேதராக அருள் பரப்பி வருகிறார் விருத்தகிரீஸ்வரர். நடுநாட்டு சிவாலயங்களில் ஒன்பதாவது திருத்தலம் இது. புராணப் பெருமையோடு வரலாற்றுச் செறிவும் நிறைந்தது. நால்வரால் பாடல் பெற்ற பெருமை கொண்டது. இத்தல ஈசனை வள்ளலார், குருநமச்சிவாயர், குமாரதேவர் போன்ற ஞானியர் பாடிப்பரவியுள்ளனர். இத்தலம் ஐந்தின் சிறப்புகளை கொண்டது. இத்தலத்திலுள்ள திருச்சுற்றுகள் ஐந்து. வடக்கு கைலாச பிராகாரத்தில் அன்னை பெரியநாயகி அருள் பொங்க நிற்கிறாள். அன்னையை விருத்தாம்பிகை என்றும் அன்போடு அழைப்பார்கள்.

அன்னையின் தரிசனம் மன இருளை நீக்கி உள்ளத் தெளிவு தரும். இத்தல விநாயகர்கள் என எல்லாமே ஐந்து மயம்தான். நுழைவாயிலைக் கடந்து உள்ளே சென்றவுடன் நாம் தரிசிக்கும் ஆழத்து பிள்ளையார் கிழக்கு முகமாக 18 அடி ஆழத்தில் இருக்கிறார். ஆழ் அகத்துப் பிள்ளையாரைத்தான் ஆழத்துப் பிள்ளையார் என்கிறார்கள்.

மனம் எனும் பூமியைத் தோண்டி ஆழமாகச் சென்று உற்று நோக்கின் அதையே இயக்கும் சக்தியான பிள்ளையாரான பரமாத்ம வஸ்துவை கண்டறியலாம். இதன் வெளிப்புற வடிவாகவே இத்தலத்தில் பூமியிலிருந்து 18 அடி ஆழத்தில் பிள்ளையார் அருள்கிறார். உள்ளே இறங்கிச் செல்ல 16 படிகள் உள்ளன. இந்தப் பதினாறும் பிள்ளையாரின் முக்கியமான ஷோடச நாமாக்கள் என்ற பதினாறு திருப்பெயர்களை சொல்வதாக உள்ளன. ஸூமுகர், ஏகதந்தர், கபிலர், கஜகர்ணர், லம்போதரர், விகடர், விக்நராஜர், விநாயகர், தூமகேது, கணாத்யக்ஷர், பாலசந்திரர், கஜானனர், வக்ரதுண்டர், சூர்ப்பகர்ணர், ஹேரம்பர், ஸ்கந்தபூர்வஜர் என்கிற பதினாறு திருப்பெயர்களை நினைவூட்டுவதாகவே இந்தப் படிக்கட்டுகள் அமைந்துள்ளன. எனவே, ஒவ்வொரு படிக்கட்டில் இறங்கும்போதும் இந்த விநாயகரின் திருநாமங்களை சொல்லலாம். ‘திருவும் கல்வியும் சீரும் தழைக்கவும்’ என்று தொடங்கி ‘பெருகும் ஆழத்துப் பிள்ளையைப் பேணுவோம்’ என்று முடியும் பதிகம் இந்த நாயகனைப்பற்றியதுதான்.  

திருநாரையூர்

பொல்லாப்பிள்ளையார்

திருநாரையூர் தலம், தமிழின் பொற்கிடங்கான தேவாரம் முதலான பதிகங்களை காட்டியருளிய தலமாகும். பல்லவர்கள் மற்றும் முற்காலச் சோழர்களின் காலத்தில் தேவாரப் பாடல்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாகத்தான் கோயில்களில் பாடப்பட்டன. பல பாடல்கள் மறைந்து விட்டிருந்தன. ராஜராஜசோழன்தான் அதற்கான தேடலை விரிவுபடுத்தி பெரிய குழுக்களை அமைத்து விட்டுப்போன பதிகங்களை தேடச் செய்தான். இதற்காகவே ஏராளமான பொருட்களை செலவு செய்தான். இப்படி ஈசனோடு கொண்டிருந்த பக்தியால்தான் தன்னையே சிவபாத சேகரன் என்றும் அழைத்துக் கொண்டான். இறுதியில் நம்பியாண்டார் நம்பி எனும் சைவப் பெருந்தகையாரின் பெரும் உதவியோடு பதிகங்களை கண்டுபிடித்து சகலத்தையும் தொகுத்தான். இவ்வாறு ராஜராஜரும், நம்பியாண்டார் நம்பியும் செய்த முயற்சியைத்தான் திருமுறை கண்ட புராணம் என்று உமாபதி சிவாச்சாரியார் பாடி வைத்தார். தொடக்கத்திலிருந்தே ராஜராஜருக்கு ஏன் இப்படி சில பதிகங்கள் மட்டும்தான் கிடைத்துள்ளன. மற்ற பதிகங்கள் எங்கேயிருக்கின்றன என்கிற குறை இருந்து கொண்டேயிருந்தது.

அப்போதுதான் திருநாரையூர் எனும் தலத்தில் நம்பியாண்டார் நம்பி என்பார் அத்தலத்திலுள்ள பொல்லாப் பிள்ளையாரின் அருள் பெற்றிருப்பதை அறிந்தார். பாலகனாக இருந்தபோதே பாலசந்திரரான பிள்ளையாருக்கு அமுது படைத்து உண்ணவும் செய்திருந்தார் என்பதை அறிந்திருந்தார். உடனேயே அத்தலத்திற்குச் சென்றார். நம்பியாண்டார் நம்பியை வணங்கிய பேரரசன் கைகூப்பியபடியே, ‘‘தாங்கள் ஆதிநாயகனோடு அளவளாவுவதாக நம்புகிறோம். தாங்கள்தான் பெருமானிடம் பதிகங்கள் எங்குள்ளன என்பதை கேட்டுச் சொல்ல வேண்டும் என்றான். பொல்லாப் பிள்ளையாரிடம் அதீத நம்பிக்கையோடு இருந்த நம்பியாண்டார் பெருமானின் கருணைப் பாதம் பற்றி ‘‘எங்கேயிருக்கிறது பதிகங்கள்’’ என்று கேட்டார். ஆதித்தலமான சிதம்பரத்தில் மேற்குப் பிராகாரத்தில் ஓர் அறையில் ஏடுகளாக உள்ளன என்று பிள்ளையார் தெரிவிக்க, அதை மன்னரிடம் நம்பியாண்டார் கூற எல்லோரும் சிதம்பரம் நோக்கி விரைந்தனர்.

தில்லை மூவாயிரவர்களிடம் இதைத்தெரிவிக்க அவர்கள் மறுத்தனர். ‘‘தேவாரம் படைத்த மூவர் வந்தால் திறப்போம்'' என்றனர். ராஜராஜன் சிலா விக்ரகங்களாக மூவரையும் நிறுத்த, தில்லை அந்தணர்கள் என்ன செய்வதென்று அறியாது முதலில் திகைத்து பின்னர் திறந்தனர். ஏடுகளை கரையான் புற்று கரைத்திருந்தது. வேண்டியதை மட்டுமே விட்டுவைத்து மீதியை மண்மூடச் செய்ததாக அசரீரியின் மூலமாக ஈசனே அப்போது அறிவித்தார். அதற்குப் பிறகு ஏடுகளை பத்திரமாக பிரித்து பாடம் செய்து பதிகங்களாக தொகுத்து அளித்தார், நம்பியாண்டார் நம்பி. அவருக்குப் பின்னால் இருந்து எல்லாவற்றையும் செய்து பதிகங்களை கொணர்ந்ததே கஜமுகனான பொல்லாப் பிள்ளையார்தான் என்பதை சொல்லத்தான் வேண்டுமா என்ன? திருப்பதிகங்களை அளித்த வேழ முகத்தோனை மறவாது தொழுவோம். இத்தலம் சிதம்பரத்திற்கு அருகேயே உள்ளது.

திருக்கடையூர் கள்ளவாரணப்பிள்ளையார்

சிறந்த சிவபக்தனான மார்க்கண்டேயனை எமன் பாசக்கயிறால் சுருக்கிட்டார். என் பக்தனையா பிடித்திழுத்தாய் என்று ஈசன் கொதித்தெழுந்தார். எமனான காலனையே சம்ஹாரம் செய்து காலசம்ஹாரமூர்த்தியாக இத்தலத்தில் அருட்கோலம் காட்டினார். எமனால் தீண்ட முடியாத தலமாக இது மாறியது. மேலும் ஈசனின் திருப்பெயரே அமிர்தகடேஸ்வரர் என்பதாகும். அம்பாளின் திருப்பெயரோ அபிராமியன்னை. அபிராமபட்டர் நெக்குருகி துதித்த ஞானதேவதை இவள். ஒருமுறை தேவர்கள் விநாயகப் பெருமானை துதியாது மறந்தனர். கொழுக்கட்டைக்குள் பூர்ணமான அமுதத்தை ஏந்தி நிற்கும் விநாயகரை மறந்துபோய் அதெப்படி அமுதத்தை பெற முடியும்? அமுதம் வேண்டும் என்கிறபோதே அதை கையில் கொண்டிருக்கும் விநாயகப் பெருமானும் நினைவுக்கு வர வேண்டு

மல்லவா? தன்னை நினைக்க மறந்த தகப்பனையே மண்டியிட வைத்த பெரிய கடவுளல்லவா அவர்!எனவே, தேவர்களும் திசை தவறினார்கள். அமுதம் என்பது ஏதோ கிண்ணத்திலிருந்து பொங்கும் விஷயம்போல நினைத்துக் கொண்டார்களோ என்னவோ. முற்றிலும் மறந்தார்கள். அதனால் ஆதிநாயகன் அமுதத்தை மறைத்தான். அதுவும் அமுத லிங்கமாக தன் தந்தை உறையும் அமிர்தகடேஸ்வரன் ஆட்சி செய்யும் தலத்திலேயே தன் லீலையை நிகழ்த்தினான். அமுத கலசத்தை எடுத்து வைத்துக் கொண்டான். தேவர்கள் தொடர்ந்து தேடினார்கள். ஈரேழு லோகங்களுக்கும் சென்று அலைந்தார்கள். யாரை முதலில் தொழவேண்டுமோ அவரைத் தொழ மறந்தோமே என்று இறுதியில்தான் ஞானம் உதித்தது. உடனே விநாயகரின் பாதம் பணிந்தார்கள். ஆதிநாயகன் அமுதக் கும்பத்தை கொடுத்தான். தேவர்கள் இனி உம்மை மறக்காது துதிப்போம் என்றனர்.

இவ்வாறு விகடமாக பிள்ளையார் லீலை செய்த தலமே திருக்கடையூர் ஆகும். இவ்வாறு லீலை செய்த தலங்களை விகட விநாயகத் தலங்கள் என்பார்கள். அப்படி விகடமாகவும் விவேகத்தோடும் நிகழ்த்திய லீலையாதலால் கள்ளவாரணப் பிள்ளையார் எனும் திருட்டு பெயரையும் தன்னோடு விளையாட்டாகவே இத்தலத்தில் சேர்த்துக் கொண்டார். ஈசனின் சந்நதிக்கு வலதுபுறத்தில் நந்திக்கு அருகேயுள்ள வெளிப்பிராகாரத்தில் கையில் அமுத கலசத்தை ஏந்தியபடி மறைந்திருக்கிறார், இந்த உள்ளம் கவர் கள்வன்.

மயிலாடுதுறையிலிருந்து 50 கி.மீ. தொலைவில் திருக்கடையூர் அமைந்துள்ளது. பொதுவாகவே இங்கு அறுபதாம் கல்யாணம் என்கிற சஷ்டியப்த பூர்த்தி திருமணத்தை நடத்துவர்.

திருச்சி உச்சிப் பிள்ளையார்

ராமச்சந்திர மூர்த்தியின் பட்டாபிஷேகம் நிறைவுற்றது. விபீஷணன் உள்ளமும், கண்களும் குளிரக்குளிர ராமரையும் சீதாப் பிராட்டியாரையும் தரிசித்தான். அவனுக்குத் தன் நினைவுப் பரிசாக தன் குலப்பதியான ரங்கநாதரை அளித்தார் ராமர். விபீஷணன் அகமகிழ்ந்து ஏற்றான். அயோத்தியிலிருந்து புறப்பட்டு திரிசிரபுரம் எனும் இன்றைய திருச்சிக்கு வந்தான். அகண்ட காவிரியையும் சுற்றிலும் இருந்த எழில் வனப்பையும் கண்டு மகிழ்ந்தான். அங்கேயே ஓய்வெடுக்கவும் தீர்மானித்தான். காவிரிக்கு அருகேயே அங்கு சிறுவனாக வந்திருந்த விநாயகரிடம் ரங்கநாதரின் சிலையை கொடுத்து விட்டு சென்றான். இத்தலத்தில்தான் இந்த ரங்கநாதர் பிரதிஷ்டையாக வேண்டுமென்று யார் தீர்மானித்தார்களோ இல்லையோ, ஞானமுதல்வன் தீர்மானித்து விட்டான். ஏனெனில் இப்போது விபீஷணன் வந்திருக்கும் காவிரியை கொண்டு வந்ததே இவர்தானே.

காக்கை உருவில் சென்று அகத்தியரை ஏமாற்றி அவர் கமண்டலத்திலிருந்து நீரை தட்டி விட்டவரே இவர்தானே. அதுபோல இங்கும் ஒரு விகட லீலையை நிகழ்த்தினார். விபீஷணன் கைகளில் கொடுத்த ரங்கநாதரை அங்கேயே வைத்தார். மறைந்தார். அருகேயுள்ள மலையின் உச்சியில் சென்று அமர்ந்து கொண்டார். விபீஷணன் திரும்ப வந்தான். சிறுவனை காணவில்லையே என்று அதிர்ந்தான். அருகேயே ரங்கநாதர் பிரதிஷ்டை ஆகியிருப்பது பார்த்து திகைத்தான். சரி, இந்த ரங்கநாதரை எடுத்துச் செல்லலாம் என்று எடுக்க முயன்றபோது அதை எடுக்க முடியவில்லை. இது அந்த ஆதிநாயகனின் லீலைதான் என்றுணர்ந்து ரங்கத்திலேயே பிரதிஷ்டை செய்தார். சிலையை கொடுத்து விட்டுச்சென்ற சிறுவன் மலையின் மீதுள்ளதை அறிந்த விபீஷணன் அங்கு சென்று பார்த்தான். ஏன் அப்படி கீழே வைத்தாய் என்று பொய் கோபம் காட்டி குட்டு வைத்ததாகவும், உச்சிப் பிள்ளையாரின் தலையில் இன்றும் அந்த குட்டின் வடு உள்ளதாகவும் சொல்வார்கள்.

திருவண்ணாமலை

இத்தலமும் விநாயகரின் அறுபடை வீடுகளில் ஒன்றாக விளங்குகிறது. ஆனால், திருவண்ணாமலை கோயிலில் அருளும் செல்வக் கணபதி, சிவகங்கை விநாயகர், ஆனைத் திரை கொண்ட விநாயகர், செந்தூர விநாயகர் எனும் சம்பந்த விநாயகர், க்ஷேத்ர விநாயகர் என்று ஐந்து முக்கிய விநாயகர் சந்நதிகள் உள்ளன. இவற்றில் அறுபடை வீடாக எதைக் கொள்ளலாம் எனும் ஐயம் உள்ளது. ஆனாலும், ஔவையார் இத்தலத்திலுள்ள ஒரு விநாயகர் மீது ஆதாரப்பூர்வமாக பாடலை இயற்றியிருக்கிறார். அல்லல் போம் வல்வினைபோம் அன்னைவயிற்றில் பிறந்த தொல்லைபோம் போகாத் துயரம்போம் - நல்ல குணமதிகமாம் அருணைக் கோபுரத்துள் வீற்றிருக்கும் செல்வக் கணபதியைக் கைதொழுதக் கால் எல்லாவிதமான தொல்லைகளும் போகும். நன்மை, தீமை போன்றவற்றால் விளையும் வினைகளும் போகும்.பிறவி எடுக்கக் காரணமான அன்னை வயிற்றில் இனி பிறக்கும் தொல்லையும் இருக்காது. அது எப்படியெனில் இந்தத் திருவண்ணாமலை எனும் அருணை கோபுரத்துள் வீற்றிருக்கும் செல்வக் கணபதியை தொழுது கும்பிட்டால் போதும். உங்களின் சகல வினைகளும் தீர்ந்துபோகும். ஞானம் கைமேல் கனியாக வரும்’ என்று கூறுகிறார். இப்படியாக அருணை கோபுரத்துள் என்று சொல்லும்போது கோயிலின் முக்கிய வாயிலான கிழக்கு ராஜகோபுரத்திற்குள்ளேயே அருளும் செல்வக் கணபதிக்குதான் ஔவைப்பாட்டி கூறுவது பொருந்தி வருகிறது. ஏனெனில் அருணையின் வாயிலிலேயே முதல் தரிசனம் முழுமுதற் கடவுளுடையதாக இருப்பதால் இந்த செல்வக் கணபதியைத்தான் ஆதியில் ஞானப்பாட்டி தரிசித்து அந்த ஆனந்தத்தில் பாடியிருக்கக் கூடும் என்பது துணிபு. அதனால் இந்த செல்வக் கணபதியை தரிசித்து வணங்குவோம்; இதர விநாயகர் சந்நதிகளையும் மறக்காமல் தொழுவோம்.

Related Stories: