சமீபத்தில் வெளியான ‘ஜஸ்டிஸ் ஃபார் ஜெனி’ என்ற படத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர், ஐஸ்வர்யா கே.எஸ். சிறுவயது முதல் நடனம் மற்றும் விளையாட்டில் ஈடுபட்டு வந்த அவர், தமிழக மாநில கபடி அணிக்காக விளையாடியுள்ளார். கோவிட் லாக்டவுனில் கிடைத்த குறும்பட வாய்ப்பு, அவரது வாழ்க்கையில் முக்கிய திருப்புமுனையாக அமைந்தது. தற்போது நட்டி நட்ராஜ் ஜோடியாக புதிய படத்தில் நடிக்கும் அவர், பான் இந்தியா படமாக உருவாகும் ஒரு படத்திலும் நடிக்கிறார்.
அவர் கூறுகையில், ‘நயன்தாராவின் தீவிர ரசிகையான நான், அவரது கடுமையான உழைப்பை கண்டு வியந்துள்ளேன். நான் நடிக்க வந்தபோது, ஆரம்பகால நயன்தாரா மாதிரி இருப்பதாக என்னை குறிப்பிட்டனர். அதை கேட்டு சந்தோஷமாக இருந்தாலும், உழைப்பதன் மூலமே உன்னத நிலையை அடைய வேண்டும் என்பது எனது ஆசை. வெற்றிமாறன், மாரி செல்வராஜ் ஆகியோர் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்பது எனது கனவு. புதிய கதைகளுடன் வரும் இளம் இயக்குனர்களின் படங்களில், மிகவும் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்’ என்றார்.
