வறுமை நீங்க வழி என்ன? :பிரச்னைகள் தீர்க்கும் பரிகாரங்கள் கோயில்கள்

?எங்கள் குடும்பத்தில் வறுமை தாண்டவமாடுகின்றது. வறுமை நீங்கி செல்வ வளம் பெற வாழ என்ன செய்யவேண்டும்?

 - பிரபாகரன், சென்னை - 74.

உத்திரம் நட்சத்திரம். கன்னி ராசி, கடக லக்னத்தில் பிறந்திருக்கிறீர்கள். குரு தசை நடந்து கொண்டிருக்கின்றது. மேலும், தற்போது கோசார குரு உங்களின் ராசியை பார்த்துக் கொண்டிருக்கிறார். அதனால் கவலைப்படாதீர்கள். உங்களுக்கு இருப்பது வறுமையா அல்லது நீங்கள் எதிர்பார்க்கும் அளவிற்கு பணம் வரவில்லையே என்று தெளிவாக இருங்கள். உங்கள் கடிதத்தின் பெரும்பாலான இடங்களில், எங்களைத் தவிர எல்லோரும் முன்னேறி விட்டார்கள் என்று எழுதியிருக்கிறீர்கள். உங்கள் மனதில் வேறு யாரையேனும் ஒப்பீடு செய்து கொண்டு அவர்கள் அளவிற்கு நாம் எப்போது முன்னேறுவோம் என்று நினைக்கிறீர்களா! பரவாயில்லை. அது மனதின் இயல்புதான். ஒப்பிடாமல் போட்டி போடாமல் முன்னேற முடியுமா என்று கேட்டால் அதில் நியாயம் இருக்கத்தான் செய்கிறது. ஆனால், மேற்கண்ட குணங்கள் எல்லாமும் ஆரம்ப காலகட்டங்களோடு முடிவுக்கு வந்து விட வேண்டும். ஆரம்ப காலத்தில் சிலரைப் பார்த்து அவர்கள் அளவிற்கு வர வேண்டுமென்று நினைத்து

பின்னர் நமக்கென்று ஒருபாதையை உருவாக்கி விட வேண்டும். அதன் பிறகு இதில் இவ்வளவுதான் சம்பாதிக்க முடியும் என்று தெரிந்து கொண்டு விடுவோம். அல்லது இந்தத் துறையில் இப்படித்தான் பணம் வரும் என்பதை அறிந்து கொண்டு விடுவோம். அதையெல்லாம் விடுத்து யார் யாரையெல்லாம் பார்க்கின்றோமோ அவர்களைபோல நாமும் செல்வ வளத்தோடு வாழ வேண்டுமென்ற ஆசை மன உளைச்சலில் தள்ளி விடும். உங்களின் ஆற்றல் எல்லாமும் இப்படியே அடுத்தவரைப் பார்த்துப் பார்த்து மறுகிக் கொண்டேயிருப்பதில் செலவாகும். அதனால், செல்வ வளம் என்பதோடு மன நிம்மதியும் மிகவும் முக்கியம். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காலத்தையும் நேரத்தையும் இறைவன்  வைத்திருக்கிறான். இன்னொருவருக்கு செல்வம் வரும்போதெல்லாம் உங்களுக்கு  வரவில்லையே என்று நினைத்தீர்களேயானால், இயற்கையின் கணக்கு  புரியவில்லை என்றே அர்த்தம்.

வறுமையை ஒழிப்பதில் தினசரி வாழ்க்கையில் சில நியமங்கள் முக்கிய பங்காற்றுகின்றன. அதிகாலை எழும் பழக்கத்தை வீட்டிலுள்ள குடும்பத் தலைவரும், தலைவியும் கைக்கொள்ள வேண்டும். வீட்டில் அழுக்குத் துணிகளை சேர்த்துக் வைத்துக் கொள்ளக் கூடாது. சிறிய குடிசையோ அல்லது பெரிய வீடோ என்பது பிரச்னையில்லை. ஒரு இனிய மணம் வீச வேண்டும். அதனால், தினமும் சாம்பிராணி போடுங்கள். இருவரில் ஒருவரோ அல்லது பிள்ளைகளோ யாரேனும் ஒருவர் பூஜையறையில் அமர்ந்து பூஜையை செய்யச் சொல்லுங்கள். காக்கைக்கு அன்னமிடுவது முதல் முன்னோர்கள் இல்லாமல் இருந்தால் அவர்களுக்குண்டான நீர்க் கடன்கள் வரை சரியாகச் செய்தல் வேண்டும். வீடு என்றால் சண்டை, சச்சரவுகள் வரும். இயல்புதான். ஆனால், அதற்கும் ஒரு எல்லையை வகுத்துக் கொள்ள வேண்டும். கணவன் - மனைவிக்குள் எப்போதும் தொட்டதற்கெல்லாம் சண்டை என்று சென்று கொண்டிருந்தால் வறுமை அழையாத விருந்தாளியாக வந்து அமரும். அதனால், பூரணமாக மனதுக்கு நிறைவாக கடுமையாக உழைத்து விட்டு தினமும் உறங்கச் செல்லுங்கள். உங்களின் உழைப்பின் பலன்கள் தானாக வருவதை பார்ப்பீர்கள். நம்மை மீறிய வெளி விசைகள், அல்லது எல்லாவற்றையும் ஆளும் இறைச் சக்தி அதற்குண்டான பலனை நிச்சயம் அளிக்கும்.

பிரதோஷதன்று சிவாலயத்திற்குச் சென்று வாருங்கள். கீழேயுள்ள திருநள்ளாறு பதிகத்தை தினமும் கூறுங்கள்.

வெஞ்சுடர்த்தீ யங்கை யேந்து விண்கொள் முழவதிர

அஞ்சிடந்தோர் ஆடல்பாடல் பேணுவ தன்றியும் போய்ச்

செஞ்சடைக்கோர் திங்கள் சூடித் திகழ்தரு கண்டத்துள்ளே

நஞ்சடைந்த நம்பெருமான் மேயது நள்ளாறே!

?எங்களுக்கு திருமணமாகி எட்டு மாதங்கள் ஆகின்றன. தாமத திருமணம்தான். எல்லோரும் இன்னும் குழந்தை பிறக்கவில்லையா என்று கேட்கிறார்கள். பரிகாரம் கூறுங்கள்.

 - லாவண்யா, மதுரை.

நீங்கள் தனுசு லக்னத்தில் பிறந்திருக்கிறீர்கள். அனுஷம் நட்சத்திரம். விருச்சிக ராசி. தற்போது சுக்கிர தசை நடந்து கொண்டிருக்கின்றது. அதனால் கவலையே படாதீர்கள். திருமணமாகி எட்டு மாதங்கள்தானம்மா ஆகின்றது. அதற்குள் ஏன் அவசரப்படுகின்றீர்கள். மருத்துவர்களே இரண்டு வருடங்கள் வரையிலும் காத்திருந்து விட்டு பிறகு வேண்டுமானாலும் வந்து பாருங்கள் என்கிறார்கள். குழந்தை பாக்யத்திற்குரிய கிரகம் மேஷ செவ்வாயாக வருவதால் செவ்வாயை பலப்படுத்த நோய் தாக்கிய ஆடு, மாடுகளின் சிகிச்சைக்கு உதவுவது நல்லது. ஊர் பொதுக் குளத்தை தூர் வாரி ஆழப்படுத்த, அகலப்படுத்த உதவுவது நல்லது. நீங்கள் மதுரைக்கு அருகேயுள்ள ஒரு கிராமம் என்று சொன்னதால் இதை குறிப்பிடுகின்றேன். மாமரக்கன்று நட்டு பராமரியுங்கள். சிவப்பு மலரால் சஷ்டி தோறும் முருகனை அர்ச்சித்து வணங்குங்கள். தற்போது உள்ள கோசார கிரக அமைப்பை கொண்டு பார்க்கும்போது இந்த வருடத்திற்குள்ளாகவே குழந்தை பாக்கியம் கிட்டும். அதற்குள் கும்பகோணத்திற்கு அருகேயுள்ள திருக்கருக்காவூர் எனும் தலத்திற்கு சென்று வேண்டிக் கொண்டு விட்டு வாருங்கள். தினமும் பத்து நிமிடங்கள் அமைதியாக அமர்ந்து ராம நாமம் சொல்லுங்கள்.

?நான் ஆறு வருடங்களாக ஒரு வேலையில் இருக்கின்றேன். நல்ல நிலைக்கு வர முயற்சித்து கொண்டிருக்கின்றேன். என்ன செய்வது? வழி கூறுங்கள்.

 - செல்வம். விருதுநகர்.

நீங்கள் ரிஷப லக்னத்தில் பிறந்தவர். எதையுமே திட்டமிட்டுத்தான் செய்வீர்கள். அவசரம் காட்ட மாட்டார்கள். உங்களின் வேலை ஸ்தானத்தை நிர்ணயிப்பதே பத்தாம் இடத்திற்கு அதிபதியான கும்பச் சனிதான். உத்யோக ஸ்தானத்தை பார்க்கும் சனியேதான் தந்தையின் ஸ்தானமாகவும் வருகிறார். அதனால், ‘‘அப்பா பண்ற பிசினஸ் எனக்கு வேண்டாம். நான் வேற லைன்ல போப்போறேன்’’ என்பீர்கள். தொழிலை தொடங்குவதற்கு முன்பேயே இது எப்படிப் போகும் என்று கணிப்பீர்கள். ஒரு பதவியையோ, பொருளையோ அடைய வேண்டுமென்று முடிவெடுத்து விட்டால் அதற்கான களப் பணியில் முதலில் இறங்குவீர்கள். ஆனால், நீறு பூத்த நெருப்பாக இருப்பீர்கள். காத்திருக்கும் காரியக் கொக்குபோல இருப்பீர்கள். ஏன், இவ்வளவு சொல்கிறேன் எனில் சூரியன், செவ்வாய், போன்ற கிரகங்கள் உங்களுக்கு ஒன்று சேர்ந்திருக்கின்றன. ஏதேனும் ஒரு விதத்தில் தங்களை நிலைநிறுத்துவதிலேயே குறியாக இருப்பீர்கள்.

மேலும், நீங்கள் பிறந்த நட்சத்திரமான மிருகசீரிஷத்தின் அதிபதியாகவே செவ்வாய் வருகிறார். பொதுவாகவே செவ்வாயை சீற்றமுள்ள கிரகமாகத்தான் சொல்வது வழக்கம். ஆனால், உங்கள் ராசியாதிபதி சுக்கிரனாக வருவதால் சீற்றத்தைக்கூட ஆக்க வழியில்தான் உபயோகப்படுத்துவீர்கள். செவ்வாயின் உணர்ச்சிக் கொந்தளிப்பும், சுக்கிரனின் ரம்மிய குணமும் கைகோர்த்துக் கொள்ளும். எனவே, பெரிய பங்களாக்களை கட்டினாலும் அதற்குள் இன்டீரியர் டெக்கரேஷனை செய்யும் பணியைச் மேற்கொள்ளுங்கள். பூங்காக்களை அமைத்துத் தருதல் போன்ற வேலைகளை ஈடுபாட்டோடு செய்வீர்கள். மூன்றாம் பாதத்தில் பிறந்தவரான நீங்கள் நர்சரி கார்டன், டெக்ஸ்டைல், பீங்கான் வகையறா பொருட்கள் போன்ற வியாபாரத்தில் இறங்கினால் பெருத்த லாபம் பெறலாம்.

ரிஷப ராசிக்கு அதிபதியாக சுக்கிரன் வருகிறார். மேலும், வேலை ஸ்தானத்தை நிர்ணயிப்பவராக சனி வருகிறார். எனவே, பெருமாளை வணங்குவது எப்போதும் நன்மை பயக்கும். அதையும் விட சுக்கிரன் உங்களின் ராசியாதிபதியாக வருவதால் குபேரனே பெருமாளை வணங்கிய ஆலயமெனில் அது இன்னும் நல்லது. வேலைவாய்ப்பில் வரும் தடைகள் எளிதாக உடைபடும். அப்படிப்பட்ட தலமே கல்லிடைக்குறிச்சி ஆகும். இத்தலத்தில் லட்சுமி வராகராக பெருமாள் சேவை சாதிக்கிறார். குபேரனால் வழிபடப்பட்ட ஆதிமூர்த்தி இவர். வராகரைவழிபடுங்கள். இத்தலம் அம்பாசமுத்திரத்திற்கு அருகே உள்ளது. நெல்லையிலிருந்து சுமார் 25 கி.மீ. தொலைவில் உள்ளது. அபிராமி அந்தாதியில் வரும் கீழேயுள்ள பாடலை தினமும் அம்பாள் சந்நதியில் அல்லது வீட்டில் இருந்தபடி மூன்று முறை சொல்லி வாருங்கள்.

பொருந்திய முப்புரை செப்புரை செய்யும் புணர்முலையாள்

வருந்திய வஞ்சி மருங்குல் மனோன்மணி! வார்சடையோன்

அருந்திய நஞ்சு அமுதாக்கிய அம்பிகை அம்புயம் மேல்

திருந்திய சுந்தரி அந்தரி பதம் என்

சென்னியதே

Related Stories: