சனிப் பிரதோஷம்

18-09-2021

மற்ற நாட்களில் சிவன் கோயிலில் வலம் வருவதற்கும் பிரதோஷத்தின்போது வலம் வருவதற்கும் வித்தியாசம் உண்டு. பிரதோஷத்தன்று வலம் வரும் முறையை, ‘சோமசூக்தப் பிரதட்சிணம்’ அல்லது சோமசூக்தப் பிரதட்சிணம் என்று சொல்வார்கள். சோமசூக்தப் பிரதட்சிணம் செய்யும் முறை: முதலில் நந்தியை வணங்கி, பிறகு அதன் பிரணவ வடிவமான கொம்புகளின் நடுவே சிவபெருமானை தரிசனம் செய்ய வேண்டும்.

அதன் பிறகு வழக்கமாக வலம் வருவதற்கு மாறாக, அப்பிரதட்சிணமாக (எதிர் வலமாக) சண்டிகேஸ்வரர் சந்நதி வரை போய்த் திரும்ப வேண்டும். அபிஷேகத் தீர்த்தம் வரும் வழியைத் தாண்டக் கூடாது! இதன்பின் போன வழியே திரும்ப வேண்டும். நந்தியை தரிசித்து, தினந்தோறும் செய்யும் வழக்கப்படி வலம் வர வேண்டும். அப்போதும், அபிஷேகத் தீர்த்தம் வரும் வழியைத் தாண்டாமல் அப்படியே திரும்பி, நந்தி வரை வர வேண்டும். இந்த முறைப்படி மூன்று தடவை செய்ய வேண்டும். இதுவே ‘சோமசூக்தப் பிரதட்சிணம்’.

ஆலகால விஷம் வெளிப்பட்டபோது, பயத்துடன் அனைவரும் கயிலையை நோக்கி ஓடினர். அப்போது விஷம் அப்பிரதட்சிணமாக - அவர்களுக்கு எதிராக வந்து விரட்டியது. எனவே, அவர்கள் வந்த வழியே திரும்பி ஓடினர். அங்கும் அவர்களுக்கு எதிராக விஷம் வந்து துன்புறுத்தியது. இப்படி இட-வலமாக அவர்கள் வலம் வந்த முறைதான் ‘சோமசூக்தப் பிரதட்சிணம்’ என்று கடைப்பிடிக்கப்படுகிறது.

பிரதோஷ காலத்தில் மேற்குறிப்பிட்ட முறைப்படி தரிசனம் செய்து வழிபட்டால் கடன், வியாதி, அகால மரணம், வறுமை, பாவம், மனத் துயரம் முதலானவை நீங்கும். முக்தி கிடைக்கும். பிரதோஷத்தின்போது கோயில்களில் கூட்டம் அதிகமாக இருக்கும். ‘சோமசூக்தப் பிரதட்சிணம் செய்கிறேன் பேர்வழி’ என்று நாம் நிலையாக நந்திக்கு முன்னால் நின்று கொள்ளக் கூடாது. கோபமே இல்லாமல், பொறுமையாக, அமைதியாக வலம் வர வேண்டும்.

பிரதோஷ நடன ஓவியம்: கும்பகோணத்தை அடுத்த திருவலஞ்சுழி (வெள்ளைப்பிள்ளையார்  கபஸ்தீஸ்வரர்) ஆலயத்தில் பிரதோஷ நடனத்தைவிளக்கும் தொன்மைக்கால ஓவியம் ஒன்று விதானத்தில் உள்ளது. இதில் விஷ மருந்திய பெருமான் சந்தியாதாண்டவத்தை ஆடுகின்றார். தேவர்களும் கணங்களும் பலவகையான வாத்தியங்களை இசைக்கின்றனர்.  வாசுகி என்ற பாம்பு பெருமானுக்குப் பிரபா மண்டலம் போல விளங்குகின்றது.

பெருமான் நடனமாடும்போது அவர் திருவடியின் கீழ் இருக்கும் முயலகன் அச்சத்தால் ஓடி தனியாக நின்று அவருடைய ஆட்டத்தை கண்டுகளிக்கிறான். அம்பிகையும் தேவர்களும் சிவபெருமானின் ஆட்டத்தை பார்த்து வியந்து நிற்கின்றனர். இத்தகைய ஓவியம் வேறெங்கும் இல்லை என்று கூறுகின்றனர். அருகு அர்ச்சனை: சிவபெருமானுக்கு உரிய பத்திரங்களில் தூர்வா பத்திரம் எனும் அருகு சிறப்புடையதாகும். விஷ வேகத்தாலான தீயைத் தாங்கிக் கொண்டிருக்கின்ற சிவபெருமானுக்குக் குளிர்ச்சியைத் தருவதும், வெப்ப வேதனைகளைத் தவிர்ப்பதுமாகிய அறுகம்புல்லால் அர்ச்சனை செய்கின்றனர்.

அறுகம்புல்லாலான ஆசனத்தை அமைத்து அந்த தூர்வாசனத்தின் மீது அமர்ந்து கொண்டு பிரதோஷ காலங்களில் சிவமூர்த்தியைத் தியானம் செய்வது நலமுடையதாகும். இவ்வேளையில் அறுகம்புல்லைக் கட்டி மாலையாகச் சிவலிங்கத்திற்கும், நந்திதேவருக்கும் அணிவிக்கின்றனர். அறுகம்புல் விஷத்தை நீக்கும் ஆற்றல் படைத்தது. பிரதோஷத்தில் ஐந்து வகை உண்டு:  1.நித்தியப் பிரதோஷம், 2.பக்ஷப் பிரதோஷம், 3.மாதப் பிரதோஷம், 4.மகா பிரதோஷம், 5.பிரளயப் பிரதோஷம் என்பவை அவை.

நித்தியப் பிரதோஷம்: ஒவ்வொரு நாளும் சூரியன் மறைவதற்கு முன்னால் இருக்கும் ஒன்றரை மணி நேரத்தில் இருந்து (சுமாராக மாலை 4.30 மணியில் இருந்து), நட்சத்திரங்கள் தோன்றக் கூடிய காலம் வரை உள்ள மாலை நேரம், ‘நித்தியப் பிரதோஷம்’ எனப்படும். பக்ஷப் பிரதோஷம்: வளர்பிறை திரயோதசி திதியில் வரும் பிரதோஷம் ‘பக்ஷப் பிரதோஷம்’ எனப்படும். மாதப் பிரதோஷம்: தேய்பிறை திரயோதசி திதியில் வரும் பிரதோஷம் ‘மாதப் பிரதோஷம்’ எனப்படும்.

மகா பிரதோஷம்: சிவபெருமான் விஷம் அருந்தி, துயர் தீர்த்த (பிரதோஷம்) காலம் ஒரு சனிக்கிழமையன்று என்பதால், சனிக்கிழமையில் வரும் பிரதோஷம் ‘மகா பிரதோஷம்’ எனப்படும். பிரளய பிரதோஷம்: பிரளய காலத்தில் எல்லா ஜீவராசிகளும் சிவபெருமானிடம் ஐக்கியம் ஆகும். உலக முடிவில் உண்டாகும் அந்தக் காலமே ‘பிரளய பிரதோஷம்’ என அழைக்கப்படுகிறது.

Related Stories: