அனுமனின் அருள் பெருக்கும் அற்புத ஆலயங்கள்

ஸ்ரீகாஞ்சி மகாசுவாமிகள் ஆஞ்சநேய ஸ்வரூப லட்சணங்களைப்பற்றி வெகு அழகாகக் குறிப்பிடுகிறார். அதாவது ‘‘ஞானத்தின் உச்ச நிலை; பக்தியில் உச்ச நிலை; பலத்தில் உச்ச நிலை; வீரத்தில் உச்ச நிலை; கீர்த்தியில் உச்ச நிலை; சேவையில் உச்ச நிலை; வினயத்தில் உச்ச நிலை’’ இவையெல்லாம் சேர்ந்த ஒரே ஸ்வரூபம் ஆஞ்சநேயனே! என்கிறார்.

வாயுவின் அம்சத்தினால் அஞ்சனாதேவியிடம் அவதரித்தவர் ஆஞ்சநேயர். நித்திய பிரம்மச்சாரியான இவர் ஏழு சிரஞ்சீவிகளுள் ஒருவர்.

நற்குணங்களுக்கெல்லாம் இருப்பிடமான தன்னகரில்லா ராம பக்த அனுமானை வழிபடுவோருக்கு அனைத்து நலங்களும் கிட்டும்.

பாரத நாடெங்கும் உள்ள பல்லாயிரக்கணக்கான திருத்தலங்களில், எண்ணற்ற திருநாமங்களுடன், எண்ணற்ற திருக்கோலங்களில் கோயில் கொண்டு அனுக்கிரகம் புரிந்து வருகிறார் ஆஞ்சநேயர்.

வேதங்களின் சிருஷ்டிகர்த்தாவான பிரம்மனை ஞான மூர்த்தியாகவும், சூரிய தேவனைத் தன் குருவாகவும் கொண்டு ஞானத்தின் உச்ச நிலையைத் தன் கடின உழைப்பாலும் அபார குரு பக்தியாலும் பெற்ற ஆஞ்சநேயர், வாயுகுமரன், வானர வீரன் என்றெல்லாம் அழைக்கப்படும் ஜயவீர ஆஞ்சநேய சுவாமி அருள்புரியும் அற்புத ஆலயங்கள் சிலவற்றைக் கண்டு தரிசிக்கலாம் வாருங்கள்!

ஜார்க்கண்ட் மாநிலத் தலைநகர் ராஞ்சியிலிருந்து வடகிழக்கில் சுமார் 130 கி.மீ. தொலைவில் உள்ளது அனுமன் பிறந்த அஞ்சனை கிராமம். ஊரைச்சுற்றி கட்வா நதி ஓடுகிறது. இதை அஞ்சனை ஆறு என்றே அழைக்கின்றனர். இங்கே உள்ள குகைக்குள் மடியில் குழந்தை அனுமனுடன் திகழும் அஞ்சனா தேவியின் புராதனச் சிலை உள்ளது. இதை ‘பிராசீன் மூர்த்தி’ என்கின்றனர். ஐந்து படிகளைக் கடந்து சற்று உயரே சென்றால் அனுமனுடன் திகழும் அஞ்சனையின் புதிய பளிங்குச் சிலையையும், சற்று இடப்புறத்தில் இடதுகையில் சஞ்சீவி மலையைத் தூக்கிச்செல்லும் ‘பஜ்ரங்பலியின் சிறிய விக்ரகமும், வலது கோடியில் அஞ்சனாதேவியின் புராதன விக்ரகமும் உள்ளது.

கூடுவாஞ்சேரி, சென்னை தாம்பரத்தை அடுத்து, செங்கல்பட்டு செல்லும் சாலையில் உள்ளது. இங்கிருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் உள்ளது கல்யாண ஆஞ்சநேயர் திருக்கோயில். பத்ம பீடத்தில் நின்ற திருக்கோலம், இடதுகையை இடுப்பில் வைத்திருக்க, வலதுகையில் கதை வைத்த நிலையில் காட்சி தருகிறார். ஜெயவீர ஆஞ்சநேயர். மூலவரான இவர் சதுர்புஜங்களுடன் சங்கு சக்கரமும் தாங்கி, சூரிய புத்திரியான ஸுவர்ச்சலா தேவியுடனும் காட்சி தருகிறார். இவரின் திருநாமம் கல்யாண ஆஞ்சநேயர்.

மத்தியபிரதேசம் மாநிலம், சிந்து வாடாவில், சாம்வலி என்ற இடத்தில் ‘பள்ளி கொண்ட அனுமன்’ கோயில் உள்ளது. நாக்பூரிலிருந்து சுமார் 20 கி.மீ. தொலைவு. இங்கு கருவறையில் கதாயுதம் அருகில் இருக்க, கால் மேல் கால் போட்டுக்கொண்டு படுத்த நிலையில் கம்பீரமாகக்காட்சி தருகிறார் அனுமன். அரைக்கண் மூடிய நிலையில் இருக்கும் இவரைத் தூங்காமல் தூங்கும் நிலையில் உள்ளதாகக் கூறுவர். இதுபோன்ற தரிசனத்தை வேறெங்கும் காண்பது அரிது.

ராமதாசர் என்்ற மகான் கங்கை நதியில் கண்டெடுத்த அழகிய ஆஞ்சநேயர் விக்கிரகம், காசிமா நகரில் உள்ள அனுமன் கட்டத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. மூலவரான இந்த ஆஞ்சநேயர் தன் வலதுகையைத் தலைக்கு மேல் தூக்கியவாரும் இடதுகையைக்கீழே தொங்கவிட்டும் காட்சி அளிக்கிறார்.

சீதா பிராட்டியைத் தேடிச்சென்ற அனுமன், இராவணனது தர்பாரில் மிக கம்பீரமாக அவனுடன் வாதிடும் அனுமனின் திருக்கோலத்தை பிரசித்தி பெற்ற கும்பகோணம் ராமசுவாமி கோயிலில் தரிசிக்கலாம்.பெங்களூர் மகாலட்சுமி புரத்தில் 22 அடி உயர ‘பிரசன்ன வீர ஆஞ்சநேயர் கோயில் உள்ளது. சிறுகுன்றின் மீது ஆஞ்சநேயர் கிழக்கு நோக்கியுள்ளார். இவருக்கு நேர் எதிரில் கல்லால் ஆன கொடிமரம் உள்ளது. ஆஞ்சநேயரின் வலதுகையில் சஞ்சீவி மலையும், இடதுகையில் கதாயுதமும் கொண்டுள்ளார். இங்குள்ள சந்நதியை வலமாகச் சுற்றி வரும்போது அஷ்டலட்சுமிகளும், இடமாக சுற்றி வரும்போது அஷ்ட விநாயகர்களும் அமைந்திருப்பது மிகவும் சிறப்புக்குரியது.

காஞ்சியிலிருந்து கலவை செல்லும் வழியில் உள்ள ஊர் ஐயங்கார் குளம். இங்குள்ள அனுமன் ஆலயம் லட்சுமி குமார தாத்தாச்சாரியார் என்பவரால் 16-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இங்கு 136 ஏக்கர் பரப்பளவில் ஒரு குளம் உள்ளது. அதன் தென்புறத்தில் நீராழி மண்டபம் போல் அழகாக அமைந்துள்ளது அனுமன் கோயில். ஒரே கல்லில் வடிக்கப்பட்ட தூண்கள், நாற்புறமும் கோபுரங்கள், நீண்ட மண்டபம், உட்பிராகாரம் என அமைந்துள்ளது. கருவறையில் கை கூப்பியவராக அருள்புரிகிறார் ஆஞ்சநேயர்.

மதுரை உசிலம்பட்டி சாலையில் ஆனையூர் உள்ளது. இந்த ஊரில் உள்ள ஐராவதீஸ்வரர் கோயிலில், ஆஞ்சநேயரின் தாயாரான அஞ்சனா தேவிக்குத் தனிச்சந்நதி உள்ளது. அஞ்சனா தேவியின் வலப்புறம் குழந்தை வடிவில் ஆஞ்சநேயரும், இடப்புறம் ஒரு பெண்ணும் காட்சியளிக்கின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டத்தில் உள்ளது முடியனூர் கிராமம். இங்கே அனந்தவல்லி சமேத ஆதிகேசவ பெருமாள் கோயில் உள்ளது.  இக்கோயிலில் உள்ள ஆஞ்சநேயர் தம் கால்களை கல்லால் ஆன சங்கிலியால் கட்டிக்கொண்டிருக்கிறார். ராமாவதாரம் முடிந்து ராமர் வைகுண்டம் புறப்பட்டபோது அனுமனை அழைக்க, அனுமன் போக மறுத்துவிட்டு, பூமியிலேயே இருக்க விரும்பி தன்கால்களை சங்கிலியால் கட்டிக்கொண்டானாம்.

108 வைணவ திவ்ய தேசங்களில் முதலாவதாக வைத்து எண்ணப்படுவது ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயில். கோயில் வெளிப்

புறத்தில் ‘பக்த ஆஞ்சநேயர்’ நெடிய உருவத்துடன் விஸ்வ ரூபியாக காட்சி தருகிறார். இவர் சந்நதியில்தான் புகழ் பெற்ற திருப்பாணாழ்வருக்கும் சந்நதி இருக்கிறது.

ஆதிக்கு (முதலுக்கு)ப் பிள்ளையார், அந்தத்திற்கு (முடிவுக்கு) அனுமன். இவர்கள் இருவரும் இணைந்த வடிவமே ‘ஆதியந்தப் பிரபு’. அர்த்தநாரீஸ்வர வடிவம் போல, சங்கர நாராயணர் வடிவம்போல இரட்டைக் கடவுள்கள் இணைந்த வடிவம் இது. இந்த வடிவத்தைச் சென்னை அடையாறு மத்திய கைலாச ஆலயத்திலும், சேலம் கந்தகிரி ஆலயத்திலும் வணங்கி வழிபடலாம்.

அலகாபாத், பிரயாகையின் கரையில் பெரிய ஆஞ்சநேயர் கோயிலைக் காணலாம். அவர் சயன கோலத்தில் காட்சி அளிக்கிறார். ஒரு தோளில் ராம-லட்சுமணரும் மற்றொரு கையில் கதாயுதமும் ஏந்திப்படுத்திருக்கிறார். காலடியில் மயில்ராவனின் உருவம் இருக்கிறது. போரிட்ட களைப்பில் ஆஞ்சநேயர் படுத்து இளைப்பாறும் கோலம் இது என்கிறார்கள். உடல் முழுவதும் சிந்தூரப் பொடி போட்ட அலங்காரக் கோலத்தில் இருக்கிறார்.

அயோத்திமா நகரின் நடுவில் ‘அனுமன் மந்திர்’ உள்ளது.

சந்நதியில் வள்ளி சிங்காதனத்தில் வெள்ளிக்குடையின்கீழ் அனுமனை அழகாக அலங்காரம் செய்து வைத்திருக்கிறார்கள். முகத்துக்கு மட்டும் குங்குமம் தடவி சிவப்பாக அலங்காரம் செய்கிறார்கள். இங்கே எப்போதும் பெண்கள் கூட்டம் அதிகம்.

காசி மாநகரில் உள்ள ‘அனுமன் காட்டி’லிருந்து காசி இந்து பல்கலைக்கழகத்துக்குச்செல்லும் வழியில் ‘சங்கட் நிவாரண ஆஞ்சநேயர் ஆலயம்’ உள்ளது. இங்கே முழுக்க முழுக்க செந்தூர வர்ணம் பூசிய ஆஞ்சநேயர் வடிவத்தை வழிபடுகிறார்கள். எதிரே ராமர்-சீதை ஆலயமும் உள்ளது.இமயத்தில் உள்ள பத்ரிநாத்திலிருந்து 10 கி.மீட்டர் தொலைவில் பாண்டுகேஸ்வரம் உள்ளது. இவ்வூரிலிருந்து 9 கி.மீ. தொலைவில் ‘அனுமன் சட்டி’ என்ற ஊரில் பிரசித்தி பெற்ற அனுமன் ஆலயம் உள்ளது. பஞ்ச பாண்டவர்கள் இங்கே வந்து வழிபட்டதாகச் சொல்லப்படுகிறது.

பூரி ஜகந்நாதர் ஆலயத்தின் தட்சிண வாயிலின் உட்புறம் 15 அடி உயரத்தில் கிரீடம் அணிந்த, பட்டுப்பீதாம்பரம் உடுத்திய அழகான ஆஞ்சநேயர் விக்கிரகம் அமைந்துள்ளது. சங்கு வடிவமான சித்திர வாயிலுடன் கருவறை உள்ளது. சுமார் ஒரு கோடி பக்தர்கள் ஆண்டுதோறும் இங்கே வந்து வழிபடுகிறார்கள்.

கேரளம் திரூர் தாலுக்காவில் உள்ள ஆலத்தியூர் என்னும் ஊரில் கீர்த்தி வாய்ந்த ‘அனுமன் கோயில் உள்ளது. இங்கே சந்நதியில் ராமர்பிரான் சீதையில்லாமல் அனுமனுடன் இருக்கிறார். சீதையைத்தேடிச்செல்லும் அனுமனுக்கு அவளிடம் சொல்ல வேண்டியவைகளை சொல்லிக்கொடுக்கும் பாவத்தில் இருக்கிறார் ராமர். இங்கே பெரிய அளவில் அவல், நைவேத்தியம் தயாரிக்கப்படுகிறது. அதில் தேங்காய், வெல்லம், சர்க்கரை, சுக்கு, சீரகம் போன்றவையும் உரிய விகிதத்தில் கலந்து தயாரிக்கிறார்கள். இதுவே பக்தர்களுக்கும் பிரசாதம்.

ஷீரடி செல்லும் பக்தர்கள் தரிசிக்க வேண்டிய முக்கிய இடம் பாபாவின் சமாதிக் கோயில். இந்த சமாதி மந்திர் ஷீரடியில் வணக்கத்துக்குரிய முக்கியமான இந்த இடத்துக்குப் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசிக்க வருகிறார்கள். ஷீரடி சாவடிக்குப் பின்னால் அனுமன் கோயில் உள்ளது. கருவறையில் இரண்டு ஆஞ்சநேயர் சிற்பங்கள் உள்ளன. இங்குள்ள பாபா படமும் செந்தூர வண்ண அனுமன் மூர்த்தங்களும் பக்தர்களுக்கு அளவில்லாத ஆனந்தத்தையும், ஆன்மிக சக்தியையும் வழங்குகிறது.

சென்னை ஸ்ரீஸ்கந்தாஸ்ரமதித்ல் பஞ்சமுக ஆஞ்சநேயர் 12 அடி உயரத்தில் நின்ற திருக்கோலத்தில் கல் விக்கிரகமாக காட்சி தருகிறார். வாயு மூலையை அலங்கரிக்கிறார். இவரை வலம் வரும்போது கோஷ்டத்தில் பக்த ஆஞ்சநேயர், பஞ்சமுக ஆஞ்சநேயர், வீர ஆஞ்சநேயர் ஆகிய சுதையான

வடிவங்கள் காட்சியளிக்கின்றன.

கர்நாடகா, பெங்களூரு அல்சூர் பகுதியில் உள்ளது மிகப்பழமை வாய்ந்த சத்தியநாராயணர் திருக்கோயில். இங்கே வீர ஆஞ்சநேயர் அபய ஹஸ்தம் காட்டி அழகிய கோலத்தில் தனிச்சந்நதி கொண்டு அருட்பாலிக்கிறார். இவருக்கு அபிஷேக அலங்காரங்களும், வடைமாலை சாற்றுதல், வெண்ணெய்க்காப்பு செய்தல் போன்றவைகள் தினமும் நடந்த வண்ணமிருக்கின்றன. எப்போதும் பக்தர் கூட்டம் நிரம்பி வழிகிறது.

சென்னை அசோக் நகரில் அமைந்துள்ளது கருமாரி திரிபுர சுந்தரி அம்பாள் திருக்கோயில். இங்கே பல மூர்த்திகளின் சந்நதிகள் உண்டு என்றாலும், இந்தக்கோயிலின் பிரதான நாயகன் அனுமன்தான்! சஞ்சீவி வீர சாந்த ஆஞ்சநேயர் என்ற திருநாமம் கொண்டிருக்கிறார். அனுமத் ெஜயந்தியன்று இவருக்கு 1,00,008 - வடையால் பிரம்மாண்ட மாலை செய்து வழிபடுகிறார்கள். சிறந்த வரப்பிரசாதியாக விளங்குகிறார்.

ஸ்ரீமுஷ்ணம் திருத்தலத்தில் அமர்ந்த கோலத்தில் ராமாயணத்தைப் பாராயணம் செய்யும் நிலையில் தனிச்சந்நதி கொண்டு காட்சி தருகிறார் அனுமன்! அருகில் ராமர் பட்டாபிஷேகம் கொண்ட கோலத்தில் உள்ளார்.வேலூருக்கு அருகில் உள்ளது ராணிப்பேட்டை. இங்கிருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ளது தெங்கால் என்ற ஊர். இங்குள்ள சிவாலயத்தில் நான்கு திருக்கரங்களுடன் மான், மழு ஏந்தியவாறு சிவசொரூபமாக காட்சி தருகிறார். இவரை ‘சிவசொரூப ஆஞ்சநேயர்’ என போற்றுகிறார்கள். இவர் கழுத்தில் ருத்ராட்ச மாலை அணிந்திருக்கிறார். இப்படியொரு அனுமன் தோற்றம் வேறெங்கும் இல்லை.

தஞ்சாவூரின் மேல வீதியில் அமைந்துள்ளது ‘பிரதாப ஆஞ்சநேயர் கோயில்’. மராட்டிய மன்னன் பிரதாப சிம்மனால் கட்டப்பட்டது. இவர் வாயு மூலையில் கோயில் கொண்டிருப்பதால் ‘மூலை அனுமார்’ எனப்படுகிறார். இங்குள்ள ஆலயத்தூணில், யோக ஆஞ்சநேயர் காட்சி தருகிறார். இவரை வணங்கி விட்டுத்தான் மராட்டிய மன்னர்கள் போருக்குச் சென்றனராம்.

சென்னை வில்லிவாக்கத்தில் கல்யாண சுப்பிரமணியர் ஆலயத்தில் ‘இரட்டை ஆஞ்சநேயர்கள்’ அருள்கின்றனர். 300 ஆண்டுகள் பழமையான இக்கோயிலில் தனிச்சந்நதியில் வாலில் மணியுடன் காட்சி தருகிறார் அழகு ஆஞ்சநேயர்.புதுக்கோட்டைக்கு அருகில் உள்ளது குடுமியான் மலை. இங்கு 12-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட சிவாலயம் உள்ளது. இங்கு அழகான ஆஞ்சநேயர், தலையில் கிரீடம், முறுக்கு மீசை, வில் போன்று வளைந்த புருவங்கள், கழுத்தில் விநோதமான மாலை, காலைச்சுற்றியிருக்கும் வால் என்று நுணுக்கமான வேலைப்பாடுகளுடன் கூடிய இந்த வீர அனுமன் சிற்பம் அரிதான ஒன்று!

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி திருக்கோயில் 8-ம் நூற்றாண்டில் பல்லவர்களால் கட்டப்பட்டது. இங்கு ராமதூத அனுமன் காட்சியளிக்கும் சிற்பம் உள்ளது. தூதனாக வந்த தனக்கு இருக்கை அளிக்காத இராவணன் எதிரில் தனது வாலையே சுருட்டி ஆசனமாக்கி அமர்ந்த நிலையில் அற்புத கோலத்தில் காட்சி தருகிறார் ஆஞ்சநேயர்.

சென்னை அம்பத்தூரில், டன்லப் கம்பெனிக்கு பின்புறம் உள்ள ஐயப்பா நகர். அயப்பாக்கத்தில் கோயில் கொண்டு அருட்புரிகிறார் பஞ்சமுக ஆஞ்சநேயர். வராஹர், கருடர், ஆஞ்சநேயர், நரசிம்மர், ஹயக்ரீவர் என்று ஐந்து முகங்களுடன், பத்து கரங்கள் கொண்டு அற்புத திருக்கோலத்தில் காட்சி தருகிறார்.

திருவண்ணாமலைக்கு அருகில் உள்ள பெரணமல்லூர் ஊரில் உள்ள சிறு குன்றின் மீது குடியிருந்து அருட்பாலிக்கிறார் வரத ஆஞ்சநேயர். இங்கு வரும் எண்ணற்ற பக்தர் கிரிவலம் வந்து வரத ஆஞ்சநேயரை வழிபடுகின்றனர்.தாமிரபரணி நதி வடக்கில் இருந்து தெற்காகப் பாயும் தட்சிண கங்கைக்கு அருகில் தெய்வச்செயல்புரம் என்னும் தலத்தில் அருமையாகக் குடிகொண்டு அருளாட்சி புரிந்து வருகிறார் ‘விஸ்வரூப சுந்தர வரத ஆஞ்சநேயர்’ சுமார் 5 அடி உயரத்தில் சாளக்கிராமத் திருமேனியராக விஸ்வரூபம் எடுத்து நின்றபடி அருட்பாலிக்கிறார். இதையடுத்து மூலவர் சந்நதிக்கு மேல் சுமார் 77 அடி உயரத்தில் மற்றொரு அனுமனும் காட்சி தருகிறார்.

ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயில் மேற்கு வாசல் பேருந்து நிறுத்தத்தில் இருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் உள்ளது ஒரு அனுமன் கோயில். வால் இல்லாமல் கூப்பிய கரங்களுடன் அருள்கிறார் மூலவர் அனுமன். அருகில் அத்தி மரத்தில் உருவாக்கப்பட்ட அனுமன் அபய ஹஸ்த கோலத்தில் அருள்புரிகிறார். இக்கோயிலுக்குப் பின்புறம் ஆஞ்சநேயர் தீர்த்தம் வளாகத்தில் கடல் மணலால் ஆன சுயம்பு அனுமனையும் தரிசிக்கலாம் ஒரே கோயில் மூன்று அனுமன்கள்.

கர்நாடகாவில் உள்ள சிருங்கேரியின் மேற்கு எல்லையில் 1200-வருடங்களுக்குமுன் ஆதிசங்கரரால் பிரதிஷ்டை செய்யப்பட்டு சிருங்கேரியின் காவல் தெய்வமாக வீற்றிருக்கும் ‘கெரே ஆஞ்சநேயர்’ எண்ணற்ற பக்தர்களின் ஆராதனை தெய்வமாக விளங்கி வருகிறார்.

இராமபிரானின் வழிபாட்டிற்காகத் திருநள்ளாறு திருத்தலத்திலிருந்து தர்பைப்புல் எடுத்து வரும்போது அனுமன் அமர்ந்து இளைப்பாறிய இடம் அனுமந்தக்குடி. அனுமன் அமர்ந்த குடி என்பது அனுமந்தக்குடி ஆகிவிட்டது. இங்குள்ள சிவன் கோயிலில் ஆஞ்சநேயருக்கு தனிச்சந்நதி உள்ளது.

சென்னைக்கருகில் திருவள்ளூர் பெரிய குப்பம் கிராமத்தில் பிரம்மாண்ட உருவில் பஞ்சமுக அனுமன் அரு்டபாலித்து வருகிறார்.

இவர் விஸ்வரூப பஞ்சமுகர் எனப்படுகிறார். இவரது உயரம் 32 அடி ஆகம சாஸ்திரப்படி அல்லாமல் மந்திர சாஸ்திர அடிப்படையிலேயே இந்தச்சிலை அமையப்பெற்றுள்ளது. பஞ்ச முகங்களின் மூலமந்திரங்கள் அந்தந்த முகங்களுக்கு நேரில் உள்ள சுவரில் முறைப்படி தனித்தனியே எழுதப்பட்டிருக்கின்றன.

சென்னை மேற்கு மாம்பலத்தில் வடதிருநள்ளாறு என்றழைக்கப்படும் கோயிலில் சனிபகவான் சந்நதியும், பஞ்சமுக அனுமான் சந்நதியும் அமைந்துள்ள.வேலூர் மாவட்டம் ஆம்பூரில் உள்ள பெரிய ஆஞ்சநேயர் திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் சுமார் 11 அடியில் ஆஞ்சநேயர் தன் காலில் சனிபகவானை மிதித்த கோலத்தில் தெற்கு நோக்கிக் காட்சியளிக்கிறார். இத்திருக்கோயில் 1489-ம் ஆண்டு விஜயநகரப் பேரரசர் கிருஷ்ணதேவராயரால் கட்டப்பட்டது.

தர்மபுரியிலிருந்து பெங்களூரு செல்லும் சாலையில் 12 கி.மீ. தொலைவில் உள்ளது முத்தம்பட்டி அருள்மிகு ஆஞ்சநேயர் திருக்கோயில். இவர் வீரஆஞ்சநேயர் எனப்படுகிறார். அமாவாசை தினங்களில் பெருந்திரளாக பக்தர்கள் வருகிறார்கள்.கும்பகோணம் - ஆவூர் பாதையில் 8 கி.மீ. தொலைவில் உள்ளது பட்டீஸ்வரம் கோபிநாத பெருமாள் ஆலயம். இங்கே ஸ்ரீமந் நராயணனின் அனுக்கிரகத்தைப் பெற்ற ஆஞ்சநேயர் ‘இரட்டை ஆஞ்சநேயராக வீற்றிருக்கிறார். ஆயிரம் இதழ்கள் கொண்ட அபூர்வத்தாமரை மலரைத் தங்கள் உடலில் தாங்கியுள்ளார்கள். ‘எதற்கும் அஞ்’ என்பதாக நம்மை ஆறுதல்படுத்தும் கோலத்தில் வீற்றிருக்கிறார்கள்.

தாம்பரம் சானடோரியத்தில் அமைந்துள்ளது ராம ஆஞ்சநேயர் கோயில். இங்குள்ள ஆஞ்சநேயர் மிகவும் சக்தி வாய்ந்தவர். ஒவ்வொரு ஆண்டும் அனுமன் ஜெயந்தியன்று ‘அகண்ட பஜன்’ நடைபெறுவது சிறப்புக்குரியது. இதில் ஏராளமான கீர்த்தனைகள் பாடப்படுகின்றன. மற்றொரு சிறப்பு அனுமனை வேண்டி தேங்காய் கட்டுவதுதான். கட்டிய 21-ம் நாளில் அவர்களின் பிரார்த்தனைகள் பலிக்கின்றனவாம்.

ஜெயமங்கள ஆஞ்சநேயர் நாமத்துடன் கோவை மாட்டத்தில் உள்ள இடுகம்பாளையத்தில் மிகப்பழமையான பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் திருக்கோயில் அற்புதமாக அமைந்துள்ளது. இங்கு பிடியரிசி திட்டம் தீவிரமாக செயல்படுத்தப்படுகிறது. மாதத்தின் முதல் சனிக்கிழமை மிகவும் விசேஷம். எண்ணற்ற பக்தர்கள் வருகை தருகிறார்கள்.

திண்டுக்கல்லுக்கு அருகில் உள்ள தாடிக்கொம்பு எனும் சிற்றூர். இங்குள்ள சௌந்திரராஜ பெருமாள் ஆலயம் மிகப்பழமை வாய்ந்தது. விஜயநகர அரசர்களால் உருவாக்கப்பட்டது. இங்குள்ள மண்டபத்தில் 10 அடி உயரமுள்ள நுண்ணிய வேலைப்பாடுகள் கொண்ட சிற்பங்கள் உள்ளன. போர்க்

கோலம் கொண்ட ராமனை அநாயசமாகத் தாங்கி நிற்கிறார் ஆஞ்சநேயர். முகத்தில் தம் இறைவனைத் தாங்கி நிற்கும் களிப்பு. வில்லில் பூட்டிய அம்பை எய்த நிலையில் காட்சி தருகிறார் ராமர். அபூர்வ சிற்பம் இது.

திருவனந்தபுரம் தொழுவன் கோட்டில் சாமுண்டி தேவி கோயில் உள்ளது. இங்கு ஆறு அடி உயரமுள்ள பஞ்சலோக ஆஞ்சநேயர் விக்கிரகம் உள்ளது. இந்தியாவிலேயே மிக உயரமான ‘பஞ்சலோக ஆஞ்சநேயர் விக்கிரகம்’ இதுதான். இந்தக்கோயில் செவ்வாய், வெள்ளி, ஞாயிறு ஆகிய மூன்று தினங்கள் மட்டுமே திறந்திருக்கும். திருவிழாக்காலத்தில் மட்டும் தொடர்ச்சியாக 11 நாட்கள் திறக்கப்பட்டு பூஜைகள்

நடைபெறும்.

மயிலாடுதுறை-கும்பகோணத்துக்கு இடையில் உள்ளது கோழி குத்தி வானமுட்டிப்பெருமாள் கோயில். இங்கு ஐந்தடி உயரத்தில் ‘சப்தஸ்வர ஆஞ்சநேயர்’ என்ற அபூர்வமான விக்கிரகம் உள்ளது. இவர் மிகவும் வரப்பிரசாதி. பக்தர்களின் துன்பத்தை விரைந்து களைபவர். இவர் தனது நீண்ட வாலைச் சுருட்டி பின்னந்தலையில் வைத்திருக்கிறார். இந்த விக்கிரகத்தை எங்கு தட்டினாலும் சப்தஸ்வரங்கன் ஒலிக்கும்.

மந்த்ராலயத்துக்கு அருகில் உள்ளது பஞ்சமுகி திருக்கோயில். ராகவேந்திரர் தியானம் செய்து தரிசித்த ஆஞ்சநேயர் இங்கு குடிகொண்டுள்ளார். ஐந்து முகங்களுடன் அருள்புரிகிறார்.  இரவு நேரங்களில் கிராமத்தை வலம் வந்து இவர் காப்பதாக ஐதீகம். அதனால் இவர் ‘காவல் காக்கும் ஆஞ்சநேயர்’ எனப்படுகிறார். அதனால் இவருக்கு பெரிய பெரிய காலணிகள் செய்து வைக்கப்படுகின்றன.

நெல்லையில் ‘கெட்வெல்’ மருத்துவமனை என்கிற தனியார் நிறுவனம் அழகிய ஆலயம் ஒன்றை அமைத்து விநாயகரையும், ஆஞ்சநேயரையும் பிரதிஷ்டை செய்துள்ளது. இங்கு ஆஞ்சநேயர் வலதுகரம் ஆசி வழங்கியும், இடதுகரம் கதாயுதம் ஏந்தியும் நின்ற திருக்கோலம் கொண்டு அருட்புரிகிறார். இவரை ‘கெட்வெல்’ ஆஞ்சநேயர் என்றே அழைக்கிறார்கள்.

சிதம்பரம்-காரைக்கால் சாலையில் உள்ளது அனந்த மங்கலம். இங்கே ‘திரிநேத்ரதசபுஜ வீர ஆஞ்சநேயர்’ அருளாட்சி புரிகிறார். வேறு எங்கும் காண முடியாத ஓர் அபூர்வ கோலத்தில் இருக்கிறார் இந்த விசேஷ ஆஞ்சநேயர் மூன்று கண்கள், பத்துக்கரங்கள், சிறகுகள், கரங்களில் பத்து வகையான ஆயுதங்கள் என போர்க்கோலத்தில் காட்சி தருகிறார்.

தாராபுரம் காடு அனுமந்தராயர் சுவாமி திருக்கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. சித்திரை வைகாசியில் இந்தத் திருக்கோயிலில் தேர்த்திருவிழா நடைபெறும். பத்து நாட்கள் உற்சவம் நடைபெறும். இதுபோன்று வேறு எங்கும் உற்சவமோ தேரோட்டமோ

நடைபெறுவதில்லை.

ஈரோடு மாவட்டம் சத்திய மங்கலத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த வேணுகோபால சுவாமி ஆலயம் உள்ளது. இங்கு ஆஞ்சநேயர் ‘கருடஸ்தம்ப ஆஞ்சநேயராகத் தனிக்கோயில் கொண்டு அருட்பாலிக்கிறார். கருடஸ்தம்பத்தின் அடிப்பாகம் 16 அடி சுற்றளவும், உயரம் 60 அடியுமாக உள்ளது. ஒரே கல்லில் உருவானது.

கும்பகோணம் மேலக்காவிரியின் தென்கரையில் அமைந்துள்ள ஆலயத்தில் ஆஞ்சநேய சுவாமி, சனிபகவானை தன் காலடியில் போட்டு மிதித்தபடி அருள்புரிகிறார். இது ஒரு அபூர்வ தரிசனமாகக் கருதப்படுகிறது. மேலும் இவர் நின்ற நிலையில் கருங்கல்லால் ஆன திருவாசியுடன் காட்சி தருகிறார்.

கர்நாடகாவில் உள்ள உடுப்பிக்கு கிழக்கே சுமார் 4 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள சிறிய குன்று ஒன்றின் அடிவாரத்தில் உள்ள குளக்கரையில் விசேஷமான கோலத்தில் இருக்கும் அனுமனை தரிசிக்கலாம். மூலவரான இவர் மேனி எங்கும் ரோமங்களுடன், கோவணம் மட்டும் அணிந்து ‘பால ரூப ஆஞ்சநேயராக’ தரிசனம் தருகிறார்.

இருளில் தெளிவாகவும், பகலில் மங்கலான தோற்றத்திலும் காட்சி தரும் அதிசய ஆஞ்சநேயரை மைசூர் சாமுண்டி மலையில் உள்ள ‘லட்சுமி நாராயணப் பெருமாள் திருக்கோயிலில் தரிசிக்கலாம். இவர் இங்குள்ள துளசி மாடம் அருகே சுயம்புவாகத் தோன்றியவர்.கர்நாடகா மாநிலம் பெங்களூரு ‘மகாலட்சுமி லே அவுட்’ என்ற இடத்தில் சிருங்கேரி சங்கராச்சார்ய சுவாமிகளால் பிரதிஷ்டை செய்து வழிபடப்பட்ட ஆஞ்சநேயரைக் காணலாம். இவர் கம்பீரமான தோற்றத்தில் 27 அடி உயரத்துடன் கம்பீரமாகக் காட்சி தருகிறார்.

ஆந்திர மாநிலம் குண்டூர் அருகில் உள்ள பொன்னூர். இங்குள்ள பிரம்மாண்டமான ஆலயத்தில் சுமார் 30 அடி உயரமுள்ள கருடாழ்வார் மற்றும் சுமார் 25 அடி உயரம் உள்ள ஆஞ்சநேயர் ஆகியோர் ஒரே சந்நதியில் நின்ற திருக்கோலத்தில் அருள்புரிவதைக் காணலாம்.

செங்கல்பட்டு புகை வண்டி நிலையம் அருகில் உள்ள தனி ஆலயத்தில் குடிகொண்டுள்ள ஆஞ்சநேயரை அழகிய கோலத்தில் காணலாம். இவர் கோட்டைச்சுவரில் சுயம்புவாகத் தோன்றியவர் என்று சொல்கிறார்கள். இவரது சந்நதியில் பொய் சத்தியம் செய்தால் விபரீத விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று கூறுகிறார்கள்.

சேலம் மாவட்டத்தில் நாமக்கல் மலைக்கோட்டையில் நின்ற திருக்கோலத்தில் 18 அடி உயரத்தில் திறந்த மண்டபத்தில் விஸ்வரூப ஆஞ்சநேயர் கூப்பிய கரங்களுடன் காட்சி தருகிறார். இது பழமையான ஆலயம். ஏணி மீது ஏறி நின்றுதான் அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. இவரது தலைக்குமேல் வால் சுருண்டிருக்கிறது. அனுமன் வளர்ந்து வருவதாகச் சொல்லப்படுகிறது.

அரக்கோணத்திலிருந்து சுமார் 25 கி.மீ. தொலைவில் உள்ள சோளிங்கரில் சிறிய மலை மீது மேற்கு நோக்கி யோக நரசிம்மரைப் பார்த்த வண்ணம் யோக ஆஞ்சநேயர் அமர்ந்துள்ளார். இது மிகவும் அபூர்வமான சேவை. அழகிய பீடத்தின் மீது நான்கு கரங்களுடன் விளங்குகிறார். சதுர்புஜங்களில் சங்கு, சக்கரம், ஜபமாலையும் கொண்டு ஒரு கை விரல்களை மடக்கிய நிலையிலும் காட்சி தருகிறார். இந்த லோக ஆஞ்சநேயருக்கு ஞாயிற்றுக்கிழமை தோறும் திருமஞ்சனம் நடக்கிறது. ஆறுகால பூஜையும் உண்டு.

நாகர்கோவில் குமரி மார்க்கத்தில் சுசீந்திரம் என்ற புகழ் பெற்ற ஸ்தலம் உள்ளது. மும்மூர்த்திகளும் ஒன்று சேர்ந்து தாணுமாலயன் என்ற பெயரோடு எழுந்தருளியுள்ளார்கள். இங்கே அனுமன் கூப்பிய கரங்களுடன் சற்று ஒய்யாரமாக நெளிந்தபடியே 18 அடி உயரத்தில் ஆஜானுபாகுவாகக் காட்சியளிக்கிறார். பழம் பெருமை வாய்ந்த இத்திருக்கோயிலில் நின்ற திருக்கோலத்தில் சேவை சாதித்தருளும் இந்த அனுமனைப் பற்றிப் பல கதைகள் வழங்கப்படுகின்றன. இவருக்கு விஸ்வரூப ஆஞ்சநேயர் என்பது திருநாமம்.

ஆஞ்சநேயர் சஞ்சீவி மலையை ஒரு கையிலும் இன்னொரு கையில் கதையையும் தாங்கி நிற்கும் காட்சியைக் காண வேண்டுமானால் ஆந்திர மாநிலம் செகந்திராபாத் ரயில் நிலையம் அருகில் உள்ள ஆஞ்சநேயர் கோயிலில் காணலாம். இவர் பத்துக்கரங்களுடன், நரசிம்மர், ஹயக்ரீவர், வராகர் மற்றும் வானர முகத்துடன் காட்சி தருகிறார்.

சென்னை நங்கநல்லூரில் கூப்பிய கரங்களுடன் 32 அடி உயரத்தில் விஸ்வரூபராக ஆதிவியாதிஹர ஆஞ்சநேயர் நின்ற திருக்கோலத்தில் அற்புதமாக காட்சி தருகிறார்.பாண்டிச்சேரி அருகே பஞ்சவடி என்ற இடத்தில் வராகர், கருடர், ஆஞ்சநேயர், நரசிம்மர், ஹயக்ரீவர் என ஐந்து முகங்களுடன் சுமார் 36 அடி உயரத்தில் நின்ற கோலம் கொண்டு அருட்பாலிக்கிறார்.மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ‘நான்தோரா’ எனும் திருத்தலத்தில் நின்ற திருக்கோலத்தில் சுமார் 110 அடி உயரத்தில் ஆஞ்சநேயர் விஸ்வரூப வடிவில் காட்சி தருகிறார்.

Related Stories: