இனி முத்தக்காட்சிகளை தவிர்க்க முடியாது: நானி

 

சென்னை: வைரா என்டர்டெயின்மெண்ட்ஸ் தயாரிப்பில் ஷௌர்யுவ் இயக்க, நானி நடித்துள்ள ‘ஹய் நான்னா’ என்ற பான் இந்தியா படம், வருகிற டிசம்பர் 7ம் தேதி திரைக்கு வருகிறது. இதில் மிருணாள் தாக்கூர், பேபி கியாரா, ஸ்ருதிஹாசன், பிரியதர்ஷி புலிகொண்டா நடித்துள்ளனர். இந்தப் படத்தின் புரமோஷனுக்காக சென்னை வந்திருந்த நானி நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தந்தை, மகளின் பாசத்தைப் பற்றி சொல்லும் இந்தப் படத்தில், மென்மையான காதல் கதையும் இடம்பெறுகிறது. கதை புதிதில்லை என்றாலும், அதை திரையில் சொல்லியிருக்கும் விதம் புதிது. தியேட்டர் அனுபவத்துக்காகவே இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது. ‘தசரா’, ‘ஷியாம் சிங்காராய்’ ஆகிய படங்களுக்குப் பிறகு இதில் எனக்கு மிகவும் வித்தியாசமான கேரக்டர் கிடைத்துள்ளது. ‘ஜெர்சி’ படத்தில் ஒரு ஆண் குழந்தைக்குத் தந்தையாக நடித்தேன். இதில் ஒரு பெண் குழந்தைக்குத் தந்தையாக நடித்துள்ளேன். நிஜத்தில் நானும் 2 குழந்தைகளுக்கு தந்தை. அம்மா சென்டிமெண்ட் போல், அப்பா சென்டிமெண்டும் அதிக சக்தி வாய்ந்தது. வாழ்க்கை மிகவும் அழகானது, அதை அனுபவித்து வாழுங்கள் என்பதையே படத்தில் சொல்கிறோம். படத்தில் நிறைய முத்தக்காட்சிகள் இருக்கின்றன. அது கதைக்கு ரொம்ப தேவையாக இருக்கிறது.

அன்பை வெளிப்படுத்த முத்தத்தை தவிர வேறென்ன சிறந்த வழி? முன்பு சரியான புரிதல் இல்லாமல் இருந்தபோது, முத்தக்காட்சிகளை மரங்களைக் கொண்டும், பூக்களைக் கொண்டும் மறைத்தோம். இன்றைக்கு நாம் மாறிவிட்டோம். யதார்த்தங்களைப் புரிந்துகொள்ள ஆரம்பித்து விட்டோம். முன்பு பெற்றோர் குழந்தைகள் முன்னால் முத்தமிட்டுக்கொள்ள மாட்டார்கள். இன்றைக்கு தினமும் முத்தங்களைப் பெறுகிறோம் அல்லது கொடுக்கிறோம். எனவே, அதை வெளிப்படையாக திரையில் காட்டுவதற்குத் தயங்கக்கூடாது. இனிமேல் சினிமாவில் முத்தக்காட்சிகளை தவிர்க்க முடியாது.

The post இனி முத்தக்காட்சிகளை தவிர்க்க முடியாது: நானி appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: