இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 13 தமிழக மீனவர்கள் சென்னை திரும்பினர்

சென்னை: இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 13 தமிழக மீனவர்கள் சென்னை திரும்பினர். விமான நிலையத்தில் அவர்களை தமிழ்நாடு மீன்வளத்துறை அதிகாரிகள் வரவேற்று சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்தனர். இந்திய கடல் எல்லையில் தமிழ்நாட்டின் மயிலாடுதுறையைச் சேர்ந்த 3 மீனவர்கள், நாகப்பட்டினத்தைச் சேர்ந்த 4 மீனவர்கள், காரைக்கால் பகுதியைச் சேர்ந்த 6 மீனவர்கள் என மொத்தம் 13 மீனவர்கள் கடந்த ஜனவரி 27ம் தேதி விசைப்படகுகளில் மீன் பிடித்துக் கொண்டு இருந்தபோது இலங்கை கடலோர காவல் படையினரால் சுற்றிவளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டனர்.

அப்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் காரைக்கால் பகுதியைச் சேர்ந்த செந்தமிழ் (27) என்ற மீனவருக்கு வலது காலில் குண்டு பாய்ந்து காயம் ஏற்பட்டார். இதையடுத்து கைது செய்யப்பட்ட 13 மீனவர்களையும், இலங்கை அரசு உடனடியாக விடுவிக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு அவசர கடிதம் எழுதினார். இதை தொடர்ந்து, இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள், இலங்கை அரசு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதனிடையே, கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இலங்கை நீதிமன்றம், 13 தமிழக மீனவர்களையும் விடுதலை செய்து உத்தரவிட்டது. 13 மீனவர்களும் இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு அவர்கள் அங்கிருந்து சென்னைக்கு விமானம் நேற்று வந்தடைந்தனர். சென்னை வந்த மீனவர்களை மீன்வளத்துறை அதிகாரிகள் வரவேற்று அவர்களை அரசு ஏற்பாடு செய்த வாகனங்கள் மூலம் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்தனர்.

The post இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 13 தமிழக மீனவர்கள் சென்னை திரும்பினர் appeared first on Dinakaran.

Related Stories: