கங்கனா ரனாவத் இயக்கி நடித்ததால், மிகுந்த எதிர்பார்ப்புடன் படம் நேற்று முன்தினம் வெளியானது. இந்த திரைப்படம் குறித்து ஆதரவு விமர்சனங்களும், கண்டன விமர்சனங்களும் வந்துள்ளன. இந்தப் படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று ஷிரோமணி குருத்வாரா பர்பந்தக் கமிட்டி (எஸ்ஜிபிசி) மற்றும் பிற சீக்கிய அமைப்புகள் நேற்று பஞ்சாப் முழுவதும் திரையரங்குகளுக்கு வெளியே போராட்டங்களை நடத்தின. இந்த திரைப்படத்தில் சீக்கியர்களுக்கு எதிரான கருத்துகள் இருப்பதாக அவர்கள் குற்றம்சாட்டினர். மேலும் சீக்கியர்களை தீவிரவாதிகள் போன்றும், தேசியவாதிகளுக்கு எதிரானவர்கள் என்றும் சித்தரிக்கப்பட்டுள்ளதாக போராட்டக்காரர்கள் கூறினர். மாநிலம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்ற நிலையில் முக்கிய நகரங்களான லூதியானா, அமிர்தசரஸ், பாட்டியாலா, ஜலந்தர், ஹோஷியார்பூர், பதிண்டா ஆகிய இடங்களில் உள்ள திரையரங்குகளில் ‘எமர்ஜென்சி’ படம் திரையிடப்படவில்லை.
பஞ்சாப் முழுவதும் பெரும்பான திரையரங்குகளுக்கு முன் பதற்றமான சூழல் நிலவியதால் மாநிலத்தில் இருக்கும் முக்கியமான மால்கள் மற்றும் திரையரங்குகளுக்கு வெளியே பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ஒரு சில திரையரங்குகளில் மட்டுமே திரைப்படம் வெளியானதாக கூறப்படுகிறது. இதற்கிடையே கங்கானா வெளியிட்ட பதிவில், ‘அனைத்து மதங்களையும் நான் மதிக்கிறேன். சீக்கிய மதத்தை பின்பற்றி வருகிறேன். எனது பிம்பத்தை கெடுக்கவும், எனது படத்திற்கு தீங்கு விளைவிக்கவும் பொய்யான பிரசாரத்தை சிலர் செய்து வருகின்றனர்’ என்று தெரிவித்துள்ளார். திரைப்படம் வெளியான முதல் நாளில் மட்டும் ரூ.2.35 கோடி வசூலானதாக கூறப்பட்டுள்ளது. கொரோனா காலத்திற்கு பிறகு கங்கனாவின் படங்களில் இந்த படம் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
The post நடிகையும், பாஜ எம்பியுமான கங்கனா இயக்கி நடித்த ‘எமர்ஜென்சி’ திரைப்படம் பஞ்சாப்பில் வெளியாகவில்லை: சீக்கிய அமைப்புகளின் போராட்டத்தால் பதற்றம் appeared first on Dinakaran.
