காட்டுமன்னார்கோவில் அருகே வாகன சோதனையில் 3 கிலோ போதை பொருள் பறிமுதல்

காட்டுமன்னார்கோவில், அக். 22: காட்டுமன்னார்கோவில் அடுத்து உள்ள ரெட்டியூர், குச்சூர், ஆயங்குடி பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் தலைமையிலான தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து காட்டுமன்னார்கோவில் உதவி ஆய்வாளர் மணிகண்டன் மற்றும் தனிப்படை போலீசார் ரெட்டியூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பெட்டி கடைகள், மளிகை கடைகளை சோதனை செய்தனர். அதனையடுத்து ரெட்டியூர் தொட்டி மதகு அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அதே வழியாக இரண்டு சக்கர வாகனங்களில் வந்த இரண்டு நபர்களை நிறுத்தி சோதனை செய்தபோது சுமார் 3 கிலோ மதிப்பிலான தடைசெய்யப்பட்ட ஹான்ஸ், கூலிப் பொட்டலங்களை மறைத்து வைத்திருந்தை போலீசார் கண்டு பிடித்தனர்.உடனடியாக அவற்றை கைப்பற்றிய போலீசார் இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் குச்சூர் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (48), மாரிமுத்து (37) என்பது தெரியவந்தது. மேலும் விசாரணையில் ஹான்ஸ் பாக்கெட்டுகளை விற்பனைக்கு வைத்திருந்ததை ஒப்புக்கொண்டார். அதனையடுத்து காட்டுமன்னார்கோவில் போலீசார் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து 3 கிலோ புகையிலை பொருட்கள் மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

The post காட்டுமன்னார்கோவில் அருகே வாகன சோதனையில் 3 கிலோ போதை பொருள் பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: