ஓய்வை அறிவித்தார் ரஃபேல் நடால்

மாட்ரிட்: பிரெஞ்ச் ஓபன் முடிசூடா மன்னன், கிராண்ட் ஸ்லாம் ெடன்னிஸ் போட்டிகளின் நாயகன் ரஃபேல் நடால்(38) சர்வதேச போட்டிகளில் இருந்து இந்த ஆண்டுடன் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
ஸ்பெயினைச் சேர்ந்த நடால் 2001ம் ஆண்டு சர்வதேச போட்டிகளில் அறிமுகமானார். அடுத்த 4 ஆண்டுகளில் பிரெஞ்ச் ஓபனில் முதல்முறையாக கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை கைப்பற்றினார். அதன் பிறகு தொட்டதெல்லாம் வெற்றி. அதிலும் ‘ஓபன் ஈரா’ எனப்படும் 1969/70ம் ஆண்டுக்கு பிறகு அதிக முறை பிரெஞ்ச் ஓபனில் சாம்பியன் வென்ற வீரர் என்ற பெருமையும் நடாலுக்கு மட்டுமே உண்டு. கூடவே 2010 முதல் 2014வரை தொடர்ந்து 5ஆண்டுகள் பிரெஞ்ச் ஓபன் பட்டத்தை கைப்பற்றியுள்ளார். முன்னதாக 3முறை ஹாட்ரிக் சாம்பியன் ஆகியுள்ளார். கூடவே ஆஸ்திரேலியா ஓபன், விம்பிள்டன், யுஎஸ் ஓபன் என எல்லா கிராண்ட் ஸ்லாம் தொடர்களில் பட்டம் வென்றுள்ளார்.

இடைஇடையே காயம் காரணமாக போட்டிகளில் பங்கேற்க முடியாமல் அவதிப்பட்டு வந்தார். அதிலும் 2022ம் ஆண்டு ஆஸி ஓபன், பிரெஞ்ச் ஓபன் போட்டிகளில் சாம்பியன் பட்டம் வென்றார். தொடர்ந்து விம்பிள்டன்னிலும் பட்டம் வெல்வார் என்ற எதிர்பார்ப்பு இருந்த நிலையில் காயம் காரணமாக அரையிறுதியில் விளையாடாமல் விலகினார். அதன் பிறகு காயத்தில் இருந்து மீள முடியாமல் ‘உள்ளே வெளியே’ என்று வந்து போய்க் கொண்டிருந்தார். வெற்றிகளு்ம் வசப்படவில்லை. ஆனால் மீண்டு வருவார் என அவரது ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில் 22 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்ற நடால் நேற்று திடீரென இந்த ஆண்டுடன் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

கூடவே சமூக ஊடகங்களில் ‘அனைவருக்கும் மிக்க நன்றி’ என பல்வேறு மொழிகளில் பதிவிட்டுள்ளார். சமகாலத்து டென்னிஸ் மும்மூர்த்திகளான ரோஜர் பெடரர், ரஃபேல் நடால், நோவக் ஜோகோவிச் ஆகியோரில் பெடரர் கடந்த ஆண்டும், நடால் இந்த ஆண்டும் ஆகியோர் ஓய்வு பெற்றுள்ளனர். கடந்த 25ஆண்டுகளில் இந்த மூவரில் ஒருவர் கூட ஒரு கிராண்ட் ஸ்லாம் பட்டம் கூட வெல்லாத ஆண்டு இந்த 2024ம் ஆண்டுதான்.

 

The post ஓய்வை அறிவித்தார் ரஃபேல் நடால் appeared first on Dinakaran.

Related Stories: