குரூப் 2ஏ பதவிகளுக்கு வரும் 14ம் தேதி 3ம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு, கலந்தாய்வு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) செயலாளர் ச.கோபால சுந்தரராஜ் வெளியிட்ட அறிவிப்பு: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-2 (குரூப் 2ஏ) பணிகளில் அடங்கிய நேர்முகத்தேர்வு அல்லாத பதவிகளுக்கான காலிப்பணியிடங்களுக்கு நேரடி நியமனம் செய்யும் பொருட்டு விண்ணப்பம் கோரி இருந்தது. இப்பதவிக்கான முதன்மை எழுத்துத்தேர்வு கடந்த 25.2.2023 அன்று நடந்தது. குரூப் 2ஏ பணிகளில் அடங்கிய நேர்முகத்தேர்வு அல்லாத பதவிகளுக்கான மூன்றாம் கட்ட மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு வரும் 14ம் தேதி சென்னை பிராட்வேயில் உள்ள டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தில் நடக்கிறது.

மூலச்சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு அழைக்கப்படும் விண்ணப்பதாரரின் கல்வித்தகுதி, மதிப்பெண், ஒட்டுமொத்த தரவரிசை எண், இடஒதுக்கீட்டு விதி மற்றும் காலிப்பணியிடங்களின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட தற்காலிக தேர்வாளர்களின் பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது. மூன்றாம் கட்ட மூலச்சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கான நாள், நேரம் மற்றும் இதர விவரங்கள் அடங்கிய அழைப்பாணையை விண்ணப்பதாரர் தேர்வாணைய இணையதளமான www.tnpsc.gov.inலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

விண்ணப்பதாரர் எழுத்துத்தேர்வில் அவரவர் பெற்ற மதிப்பெண், ஒட்டுமொத்த தரவரிசை, இடஒதுக்கீட்டு விதிகள், விண்ணப்பத்தில் அளித்துள்ள தகவல்கள் மற்றும் காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப கலந்தாய்விற்கு அனுமதிக்கப்படுவர்.
எனவே, சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்படும் அனைவரும் கலந்தாய்விற்கு அனுமதிக்கப்பட்டு பணி நியமனம் வழங்கப்படும் என்பதற்கான உறுதி அளிக்க இயலாது. விண்ணப்பதாரர் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு குறிப்பிடப்பட்ட நாள் மற்றும் நேரத்தில் கலந்துகொள்ள தவறினால் அவர்களுக்கு மறுவாய்ப்பு அளிக்கப்படமாட்டாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post குரூப் 2ஏ பதவிகளுக்கு வரும் 14ம் தேதி 3ம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு, கலந்தாய்வு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: