ஈரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்ட தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் கைது

ஈரோடு, ஜூலை 4: ஈரோட்டில் பதவி உயர்வு கலந்தாய்வை நிறுத்தி வைக்கக்கோரி சாலை மறியலில் ஈடுபட்ட தொடக்க பள்ளி ஆசிரியர்களை 130 பேரை போலீசார் கைது செய்தனர். ஈரோடு காளைமாட்டு சிலை அருகே மாநகராட்சி நடுநிலைப்பள்ளி முன் தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (டிட்டோ ஜாக்) சார்பில் தொடக்க பள்ளி ஆசிரியை, ஆசிரியர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு அந்த அமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சரவணன் தலைமை தாங்கினார். மாநில ஒருங்கிணைப்பாளர் முத்துராமசாமி முன்னிலை வகித்து கோரிக்கைகளை விளக்கி பேசினார்.

இதில், தொடக்க கல்வித்துறையில் பணியாற்றும் ஆசிரியர்களின் பதவி உயர்வு மற்றும் முன்னுரிமை ஆகியவற்றை பறிக்கும் பள்ளிக்கல்வித்துறை அரசாணை எண் 243ஐ ரத்து செய்ய வேண்டும். பதவி உயர்வு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடந்து வரும் நிலையில், இறுதி தீர்ப்பு வரும் வரை அறிவிக்கப்பட்டுள்ள பொது மாறுதலுக்கான கலந்தாய்வினை நிறுத்தி வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி, சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த டவுன் டிஎஸ்பி ஜெய்சிங் தலைமையிலான இன்ஸ்பெக்டர்கள் விஜயன், பிரேமா மற்றும் போலீசார் மறியலில் ஈடுபட்ட 80 ஆசிரியைகள் உட்பட 130 பேரை போலீசார் கைது செய்து, போலீஸ் வாகனங்களில் ஏற்றி அருகில் உள்ள திருமண மண்டபங்களில் அடைத்தனர். ஆசிரியர்களின் போராட்டத்தினால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

உடலுக்கு எது நல்லது, கெட்டது என பார்த்துப் பார்த்து சாப்பிட்ட காலம் மாறிப்போய், தற்போது எந்த உணவில் அதிக சுவை உள்ளது, எந்த உணவில் அதிக நிறம் உள்ளது என்பதைப் பார்த்து சாப்பிடும் காலம் வந்துவிட்டது. அப்படி சுவையுடன் சாப்பிடும் உணவுகளில் எது போன்ற கலவைகள் கலந்துள்ளன என்பதைப்பற்றி சிறிதும் கவலைப்படாமல் நாவிற்கு சுவை அளித்தால் மட்டும் போதுமென்று தற்போதைய இளைய தலைமுறையினர் பல உணவுகளை விரும்பி சாப்பிட்டு வருகின்றனர். இதனால் காலப்போக்கில் உடல்நிலை பாதிக்கப்பட்டு கடைசி வரை மருந்து, மாத்திரைகளுடன் நடமாடும் சூழ்நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

என்றாவது ஒருநாள் ஆசைக்காக சாப்பிட்டால் அதை ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் உடலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய உணவுப் பொருட்களை தினம் தினம் தேடிப் பிடித்து சாப்பிட்டு வருவது பல்வேறு சிக்கல்களை அவர்களுக்கு தொடர்ந்து கொடுத்து வருகிறது. இருந்தபோதிலும் மாத்திரையை சாப்பிட்டு விட்டு மீண்டும் இனிப்பை தேடிச் செல்லும் சர்க்கரை நோயாளிகள் போல தற்போதைய இளைய தலைமுறையினர் மாறிவிட்டனர். அதுவும் மாலை வேளையில் அவர்கள் தேடிப் பிடித்து சாப்பிடும் சிற்றுண்டிகளை கண்டாலே அச்சமூட்டும் வகையில் உள்ளன.

மாலை வேளையில் பெரும்பாலும் போண்டா, பஜ்ஜி, வடை போன்ற உணவு வகைகளை சாப்பிட்டு வந்த நம் மக்கள் தற்போது சாண்ட்விச், பாவுபஜ்ஜி, பேல் பூரி, பானிபூரி, கட்லட் போன்ற வடநாட்டு உணவுப் பொருட்களை அதிகம் வாங்கிச் சாப்பிட தொடங்கி விட்டனர். இதன் காரணமாக வடநாட்டில் இருந்து ஏராளமானோர் தொழில் செய்ய சென்னை போன்ற பெரு நகரங்களை நோக்கி படையெடுக்க தொடங்கி விட்டனர்.

அவர்கள், சென்னைக்குச் சென்று பானி பூரி கடை வைத்து பிழைத்துக் கொள்வேன் என அசாதாரணமாக கூறுகிறார்கள். அவர்கள் கூறுவது முற்றிலும் உண்மை. ஏனென்றால் மாலை வேளையில் ஒவ்வொரு பானிபூரி கடை முன்பும் கையில் தட்டு அல்லது சிறிய அளவிலான குடுவகைகளை வைத்துக்கொண்டு நம்மவர்கள் கையேந்துவதும், ஒரு பூரியை எடுத்து அதை ஒரு திரவத்துக்குள் முக்கி சிறிது வெங்காயத்தை உள்ளே போட்டு அப்படியே வாயில் போட்டு மெய்மறந்து சாப்பிடுவதும் தினமும் நாம் காணும் காட்சிகளில் ஒன்று.

அப்படி அந்த பானிபூரியில் என்னதான் இருக்கிறது, அதை எவ்வாறு செய்கிறார்கள், அதை தருபவர்கள் எவ்வளவு சுத்தமாக இருக்கிறார்கள், இதை சாப்பிடுவதால் எந்த நன்மைகள் நமது உடலில் உண்டாகும், அல்லது எது போன்ற நோய்கள் நம்மை வந்து சேரும் என எதையும் அறியாமல் அப்படியே சாப்பிட்டு விட்டு கித்னா பையா என கேட்டு பணத்தை கொடுத்து விட்டுச் செல்லும் சூழ்நிலையில்தான் தற்போது நம் மக்கள் உள்ளனர்.

எந்த ஒரு உணவுப் பொருளை எடுத்துக் கொண்டாலும் அதன் நன்மை தீமைகளை அறிந்து சாப்பிட வேண்டும் என நம் முன்னோர்கள் நமக்கு சொல்லிக் கொடுத்துவிட்டுச் சென்றுள்ளனர். அதிலும் காலத்திற்கு ஏற்றவாறு எந்த உணவுகளை எவ்வாறு சாப்பிட வேண்டும், எந்த சீர்தோச நிலைக்கு ஏற்றவாறு உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும் போன்ற பல விஷயங்களை நம் முன்னோர்கள் நமக்கு கற்றுக் கொடுத்துள்ளனர். ஆனால் இவை எல்லாவற்றையும் மறந்து விட்டு தற்போது சுவை மற்றும் நிறத்திற்கு அடிமையாகி நாம் நமது ஆரோக்கியத்தை இழந்து வருகிறோம் என்பதே நிதர்சனமான உண்மை.

அந்த வகையில் சென்னையில் ஒவ்வொரு பள்ளிக்கூடம், பேருந்து நிலையம் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கண்கூடாக நாம் ஒரு பானிபூரி கடையை பார்க்கலாம். சாதாரணமாக ஒரு சிறிய வண்டியில் பானிபூரி பாக்கெட்டுகளை அந்த வண்டி முழுவதும் சுற்றி தொங்கவிட்டு ஒரு சிறிய பானை அல்லது குவளையில் தண்ணீர் ஊற்றி வட மாநிலத்தவர்கள் வியாபாரம் செய்வதை பார்க்கிறோம்.

அப்படி என்னதான் இந்த பானிபூரியில் இருக்கிறது என்று பார்த்தால், இது ஒரு வட மாநில சிற்றுண்டி வகையைச் சேர்ந்த உணவுப் பொருளாகும். பாகிஸ்தான், வங்கதேசம், நேபாளம் ஆகிய நாடுகளில் இது மிகவும் பிரபலம். இந்தியாவில் முதன்முதலில் தெற்கு பீகார் பகுதியில் இந்த பானிபூரி கலாச்சாரம் தோன்றியது எனக் கூறுகிறார்கள். இதனை அந்த பகுதியில் கோல் கப்பா என அழைப்பார்கள்.

தமிழ்நாடு, கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத், மத்திய பிரதேசம் மற்றும் நேபாளில் இதனை பானிபூரி என அழைக்கிறார்கள். மேலும் ஒவ்வொரு பகுதிகளுக்கு ஏற்றபடி இதற்கு பல்வேறு பெயர்களை சூட்டுகிறார்கள். பூரியை செய்வதற்கு மைதா, ரவை, தண்ணீர், எண்ணெய், உப்பு போன்ற பொருட்களை பயன்படுத்துகிறார்கள். பானியை செய்வதற்கு புதினா, கொத்தமல்லி தழை, பச்சை மிளகாய், வெல்லம், புளி, சீரகத்தூள் போன்றவற்றை பயன்படுத்துகிறார்கள்.

அதற்குள் வைக்கும் மசாலாவை செய்வதற்கு உருளைக்கிழங்கு, சீரகத்தூள், மிளகாய்த்தூள், மஞ்சள் தூள் மற்றும் சில மசாலாக்களை பயன்படுத்துகின்றனர். மசாலா உருளைக்கிழங்கை நன்றாக வேக வைத்து, அதில் சீரகத்தூள் உள்ளிட்டவற்றை சேர்த்துக் கொள்கின்றனர். இதன் மூலம் குறிப்பிட்ட அந்த பூரியை உடைத்து, குறிப்பிட்ட இந்த உருளைக்கிழங்கு மசாலாவை அடைத்து அதை பானி எனப்படும் தண்ணீரில் நனைத்து அந்த ஓட்டைக்குள் நீர் இருக்கும்படி தருகிறார்கள்.

இதில் புளிப்பு மற்றும் காரம் சேர்ந்த ஒரு கலவை சுவையாக நமக்கு கிடைக்கிறது. தற்போது சுவைக்காக பானிபூரியில் தயிர் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை சேர்த்து தருகிறார்கள். இந்த பூரிகளை ஒவ்வொரு கடைக்காரரும் தனித்தனியாக செய்வதில்லை. பூரிகளை மொத்தமாக வாங்கி அதை பயன்படுத்துகிறார்கள். அந்த பூரிகளை இவர்கள் எந்த எண்ணெயில் செய்கிறார்கள் என்பதை முதலில் பார்க்க வேண்டும். மேலும் அதில் மைதா கலந்திருப்பதால் கண்டிப்பாக அது உடலுக்கு பல்வேறு பிரச்னைகளை ஏற்படுத்தும்.

மேலும் பூரியை பெரும்பாலும் தங்கள் விரல்களால் தான் கடைக்காரர்கள் உடைக்கிறார்கள். அவ்வாறு உடைக்கும்போது அவர்களின் கை எவ்வளவு சுத்தமாக உள்ளது என்பதை நாம் பார்க்க வேண்டும். அவர்களது நகத்தில் படிந்துள்ள அழுக்குகள், மேலும் கையில் உள்ள அழுக்குகள் பானியில் கண்டிப்பாக ஒட்டிக் கொள்ளும். எனவே முடிந்தவரை கடைக்காரர்கள் வெறும் கைகளால் அதனை உடைக்க நாம் அனுமதிக்க கூடாது.

சுத்தமில்லாமல் பரிமாறப்படும் உணவு வகைகளை சாப்பிடுவதால் வயிற்றில் புழுக்கள் உற்பத்தியாகி அது பல்வேறு தொற்று வியாதிகளை ஏற்படுத்திவிடும். மேலும் கடைக்காரர்களுக்கு வேறு விதமான கொடிய நோய்கள் இருப்பின் அதுவும் நம்மை தொற்றிக் கொள்ளும் அபாய சூழ்நிலையும் உள்ளது. மேலும் பானையில் உள்ள தண்ணீர் சுகாதாரத்தன்மை உடையதா என்பதையும் பார்க்க வேண்டும். பல்வேறு இடங்களில் மொத்தமாக அடர்த்தியான கலவைகளாக பானியை செய்து கொண்டு வந்து, காலியாகக் காலியாக அதில் அருகில் உள்ள இடங்களில் தண்ணீரை நிரப்பி விற்று வருகின்றனர்.

மேலும் அதில் கலக்கும் கொத்தமல்லி, புளி, சீரகம் உள்ளிட்டவை நல்லமுறையில் தயாரிக்கப்படுகின்றனவா என்பதையும் பார்க்க வேண்டும். தற்போது இவைகளில் சுவைகள் வர இது போன்ற பொருட்களை தனித்தனியாக பயன்படுத்தாமல் மொத்தமாக பானி மசாலா என்று இருக்கக்கூடிய மசாலா பொருட்களை வாங்கி பயன்படுத்துகின்றனர். இதில் சுவைக்காக அதிகப்படியான மசாலாக்கள் சேர்க்கப்படுவதால் அது பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்தும்.

மேலும் குறிப்பிட்ட அந்த மசாலாவை தயார் செய்யும்போது சுத்தமாக அதனை தயார் செய்வது இல்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. எனவே பானிபூரி விஷயத்தில் 3 இடங்களில் அதிகளவில் தவறுகள் ஏற்படுகின்றன. எனவே பொதுமக்கள் பானி பூரி சாப்பிடும்போது முதலில் அந்த கடை எங்குள்ளது, சுத்தமாக உள்ளதா, சுகாதாரமாக உள்ளதா என்பதை பார்க்க வேண்டும். தெருவோரக்கடைகள், சாக்கடை ஓரம், குப்பைத்தொட்டி ஓரம் கடைகள் இருந்தால் கண்டிப்பாக அந்த கடைகளை தவிர்க்க வேண்டும்.

மேலும் கையுறையில்லாமல் கடைக்காரர் பானிபூரி உடைக்க அனுமதிக்கக் கூடாது. மேலும் பானிபூரியை எடுத்து அவர்களது பானையில் நனைத்து தரும்படி சொல்லக்கூடாது. பதிலாக தனியாக ஒரு சிறிய பாத்திரத்தில் பானியை வாங்கி நாமே அதை ஊற்றி சாப்பிடலாம். மேலும் மசாலா கலவை உள்ளிட்டவை மிகவும் காரமாக, புளிப்பாக இருக்கக் கூடாது. இவற்றையும் மக்கள் கூர்ந்து கவனிக்க வேண்டும். முடிந்தவரை என்றாவது ஒருநாள் சாப்பிட்டால் தவறு கிடையாது. ஆனால் இதை தினந்தோறும் எடுத்துக் கொண்டால் கண்டிப்பாக வயிறு சம்பந்தமான பிரச்னைகளும், தொற்றுநோய்களும் கண்டிப்பாக வரும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
எனவே காசு கொடுத்து நோயை வாங்கும் சூழ்நிலையை மாற்றி சத்தான பாரம்பரிய உணவுகளை மக்கள் சாப்பிட வேண்டும் என்பதே மருத்துவர்களின் வேண்டுகோளாக உள்ளது.

பவானி, ஜூலை 4: ஈரோடு மாவட்டத்தில் உள்ள நகராட்சிகளில் நடைபெறும் வளர்ச்சி திட்டங்கள் குறித்த ஒருங்கிணைந்த ஆலோசனை கூட்டம் பவானி நகராட்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.
இதில், நகராட்சிகளின் திருப்பூர் மண்டல நிர்வாக இயக்குநர் இளங்கோவன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பவானி, கோபி, சத்தி மற்றும் புளியம்பட்டி பகுதியில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசின் திட்டங்கள் குறித்து கேட்டறியப்பட்டது. முதல் கட்டமாக அம்ருத் 2.0 குடிநீர் விரிவாக்க திட்ட பணிகள் செயல்படும் விதம் தொடர்பாக நகராட்சி அதிகாரிகள், ஒப்பந்ததாரர்களிடம் ஆலோசனை செய்யப்பட்டது.

இப்பணிகளை குறித்த காலத்தில் முடிக்கும் வகையில் கூடுதல் பணியாளர்களை நியமித்து குடி நீர் விரிவாக்க திட்ட பணிகளை குறித்த காலத்தில் ஒப்பந்ததாரர்கள் முடித்து பொது மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். என திருப்பூர் மண்டல நகராட்சிகளின் இயக்குனர் இளங்கோவன் கூறினார். அப்போது,திட்டம் செயலாக்கம் தொடர்பாக ஏற்படும் காலதாமதம் குறித்து ஒப்பந்ததாரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

நகராட்சி பகுதியில் பல்வேறு நிதி ஒதுக்கீடுகளின் பேரில் நடை பெற்று வரும் பணிகள் குறித்த விவரங்களை கண்காணித்து, விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். மேலும், பணி செயலாக்கத்தின் போது பொது மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை போக்கவும், துரிதமாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில், நகராட்சி ஆணையாளர்கள் மோகன்குமார் (பவானி), செல்வம் (சத்தி), சம்சுதீன் (புளியம்பட்டி), நகராட்சி பொறியாளர்கள் கதிர்வேல், சிவக்குமார், காளீஸ்வரி, சிவக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

The post ஈரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்ட தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் கைது appeared first on Dinakaran.

Related Stories: