குளத்தில் மூழ்கி 2 மனவளர்ச்சி குன்றிய சிறுவர்கள் சாவு

முஷ்ணம், ஏப். 18: கடலூர் மாவட்டம் முஷ்ணம் அருகே நந்தீஸ்வரமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ராமமூர்த்தி. இவரது மனைவி சந்தானலட்சுமி. இவர்களுக்கு திலீப் (16), தினேஷ் (14) என இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்கள் மனவளர்ச்சி குன்றியவர்கள். சந்தானலட்சுமி கடந்த 8 வருடத்துக்கு முன்பு உடல் நலக்குறைவால் இறந்துவிட்டார். இதனால் இவரது கணவர் ராமமூர்த்தி 2 குழந்தைகளையும் தனியாக விட்டுவிட்டு சென்னைக்கு சென்றுவிட்டார். இதையடுத்து 2 குழந்தைகளையும் சந்தானலட்சுமியின் தாய் லலிதா கடலூரில் உள்ள மனவளர்ச்சி குன்றிய பள்ளியில் சேர்த்துள்ளார்.

இந்நிலையில் விடுமுறையையொட்டி 2 குழந்தைகளும் கடந்த வாரம் சொந்த ஊருக்கு வந்தனர். நேற்று 2 பேரும் இயற்கை உபாதைக்காக வீட்டுக்கு அருகில் உள்ள குளத்திற்கு சென்றுள்ளனர். ஆனால் அவர்கள் மீண்டும் வீட்டுக்கு வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் தேடியபோது 2 பேரும் குளத்தில் சடலமாக கிடந்தது தெரியவந்தது. இதுகுறித்து தகவலறிந்து வந்த சோழத்தரம் இன்ஸ்பெக்டர் ராபீன்சன் மற்றும் போலீசார் 2 சிறுவர்களின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post குளத்தில் மூழ்கி 2 மனவளர்ச்சி குன்றிய சிறுவர்கள் சாவு appeared first on Dinakaran.

Related Stories: