சேரி பாஷை என விமர்சனம்: நடிகையும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு வீட்டுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு..!!

சென்னை: சேரி பாஷை என விமர்சனம் செய்த விவகாரம் தொடர்பாக நடிகையும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு வீட்டுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மணிப்பூர் பெண்கள், பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டபோது நடவடிக்கை எடுக்காத தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு, த்ரிஷாவுக்காக குரல் கொடுப்பதாக கூறி, எக்ஸ் சமூக வலைதளத்தில் ஒரு நபர் விமர்சனம் செய்து பதிவு வெளியிட்டிருந்தார். இதற்குப் பதிலளித்த குஷ்பூ, தங்களைப்போல், சேரி மொழியில் தன்னால் பேசமுடியாது என்று பதிவிட்டிருந்தார்.

அவரின் அந்தப் பதிவில், ‘சேரி மொழி’ என குறிப்பிடப்பட்டிருந்ததற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து விளக்கம் அளித்த குஷ்பூ, பட்டியலின மக்களின் உரிமைகளுக்காக நான் எப்போதும் முன்னணியில் நிற்பேன். பிரெஞ்சு மொழியில் சேரி என்ற வார்த்தைக்கு அன்பு என்பதே பொருள். அன்பு என்ற அர்த்தத்திலேயே சேரி என்பதை பயன்படுத்தினேன் என விளக்கம் கொடுத்துள்ளார். இதனிடையே நேற்று குஷ்புவின் கருத்துக்கு தமிழ்நாடு காங்கிரஸின் பட்டியலினப் பிரிவு கடும் கண்டனம் தெரிவித்தது. தலித் மக்கள் பேசும் மொழியை வன்மம் கொண்ட மொழி, தீண்டத்தகாத மொழி என குஷ்பு இழிவுபடுத்தி பேசியுள்ளதாக புகார் தெரிவிக்கப்பட்டது.

குஷ்பு பொது மன்னிப்பு கேட்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என்று எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில், பட்டியலின மக்கள் தொடர்பாக சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த விவகாரத்தில் குஷ்பு வீட்டுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. மாலை 5 மணிக்குள் மன்னிப்பு கேட்காவிட்டால் குஷ்பு வீட்டை முற்றுகையிட போவதாக காங்கிரஸ் அறிவித்திருந்ததால் போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். குஷ்பு வீட்டு முன்பு நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.

The post சேரி பாஷை என விமர்சனம்: நடிகையும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு வீட்டுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: