செங்கல்பட்டு அருகே முக்தீஸ்வரர் ஆலயத்தில் மகா கும்பாபிஷேக விழா

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே தர்மசம்வர்தினி அம்பிகை சமேத முக்தீஸ்வரர் ஆலயத்தில் நேற்று மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். செங்கல்பட்டு அருகே ஆத்தூரில் தர்மசம்வர்தினி அம்பிகா சமேத முக்தீஸ்வரர் ஆலயத்தில் மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 27ம் தேதி மூலவர் பிரதிஷ்டையும், கடந்த 1ம் தேதி முதல் யாகசாலை ஹோமங்கள் நடைபெற்றன. இதைத் தொடர்ந்து இரண்டாம் கால யாகசாலை பூஜை, பூர்ணாஹுதி மற்றும் மகா தீபாராதனையும், மூன்றாம் கால யாக சாலை பூஜை மற்றும் அனைத்து மூலவர் சன்னதிகளிலும் பல்வேறு அபிஷேக, அலங்காரங்களுடன் மகா தீபாராதனை நடைபெற்று வந்தது.

இந்நிலையில் நேற்று யாகசாலை பூஜைகளுடன் நாடி சந்தானம், பூர்ணாஹுதி மற்றும் மகா தீபாராதனை மற்றும் கடம் புறப்பாடு, தீபாராதனையுடன் மகா கும்பாபிஷேகம் நடந்தது. பின்னர் பொல்லா பிள்ளையார், சகஸ்ரலிங்கம், 63 நாயன்மார்கள் மற்றும் தொகையடியார்கள் சன்னதிகளில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இக்கும்பாபிஷேகத்தை காண ஆத்தூர் உள்பட பல்வேறு சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசித்தனர். அவர்கள்மீது சிவாச்சாரியார்கள் புனிதநீரை தெளித்தனர்.

பின்னர் சிறப்பு பூஜைகளுடன் 1000 சிவலிங்கங்கள் தாங்கிய ஒரு திருமேனிக்கு கலச நீர் ஊற்றப்பட்டு மகா தீபாராதனை நடந்தது. கும்பாபிஷேகத்தில் பங்கேற்ற பக்தர்கள் அன்னதான பிரசாதங்கள் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் மிகச் சிறப்பாக செய்திருந்தனர்.

The post செங்கல்பட்டு அருகே முக்தீஸ்வரர் ஆலயத்தில் மகா கும்பாபிஷேக விழா appeared first on Dinakaran.

Related Stories: