வல்லம்: தேசிய அறிவியல் தின விழாவை முன்னிட்டு, தஞ்சாவூர் அருகே திருமலைசமுத்திரம் சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 5 பேருக்கு தேசிய அறிவியல் நாள் விருதுகள் வழங்கப்பட்டன. தேசிய அறிவியல் தின விழாவை முன்னிட்டு தஞ்சாவூர் சாஸ்த்ரா நிகர்நிலை பல்கலைக்கழகத்தில், பல்வேறு துறைகளில் முன்னோடியாக பணியாற்றிய நாட்டின் சிறந்த விஞ்ஞானிகள் கவுரவிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் நேற்று நடந்த விழாவில் இந்திய அறிவுசார் அமைப்புகளில் சிறப்பான பங்களிப்பு செய்த மணிபால் உயர் கல்வி அகாடமி பேராசிரியர் எம்.எஸ். வலியதனுக்கு சாஸ்த்ரா - மகாமனா விருது, இயற்பியலில் சிறந்த பங்களிப்பு செய்த பெங்களூரு இந்திய அறிவியல் கழகப் பேராசிரியர் எஸ். ராமசாமிக்கு சாஸ்த்ரா - ஜி.என். ராமச்சந்திரன் விருது, உயிர் அறிவியலில் சிறந்த பங்களிப்பு செய்த மும்பை இந்திய தொழில்நுட்பக் கழகப் (ஐஐடி) பேராசிரியர் சமீர் கே. மாஜிக்கு சாஸ்த்ரா - ஒபைத் சித்திக் விருது, வேதியியல் மற்றும் உலோக அறிவியலில் சிறந்த பங்களிப்பு செய்த பெங்களூரு இந்திய அறிவியல் கழகப் பேராசிரியர் எஸ். நடராஜன், சென்னை இந்திய தொழில்நுட்பக் கழகப் (ஐஐடி) பேராசிரியர் டி. பிரதீப் ஆகிய இருவருக்கு சாஸ்த்ரா - சி.என்.ஆர். ராவ் விருதுகள் மற்றும் தலா ரூ. 5 லட்சம் ரொக்கப் பரிசு, பாராட்டு மடல் ஆகியவை வழங்கப்பட்டன.