திருக்கழுக்குன்றம், மார்ச் 24: திருக்கழுக்குன்றத்தில் ஜோதிடம் பார்ப்பதற்காக வந்த பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஜோதிடரை, போலீசார் கைது செய்தனர். செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் வடக்கு மாடவீதி பகுதியை சேர்ந்தவர் பார்த்தசாரதி (73). இவர், அதே பகுதியில் கடந்த சுமார் 30 ஆண்டுகளுக்கு மேலாக திருமணம் மற்றும் பல்வேறு சடங்கு உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் ஜோதிடம் பார்த்து, நாள் குறித்து வருவதும், மேலும் நாடி பிடித்து பார்த்து அவர்களின் எதிர்காலம் குறித்து கணித்து கூறுவதுமாக இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று சுமார் 38 வயது மதிக்கத்தக்க பெண்மணி ஒருவர், அவரது இல்ல சுப நிகழ்ச்சிக்காக ஜோதிடம் பார்ப்பதற்காக பார்த்தசாரதியிடம் தனது மகன் மற்றும் உறவினர்களுடன் சென்றுள்ளனர். அப்போது, அப்பெண்ணுடன் வருந்தவர்கள் அனைவரையும் வெளியே அனுப்பிவிட்டு, கதவை உள் தாழ்ப்பாளிட்டு அந்த பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். உடனே பதறிப்போன அப்பெண், சத்தம் போட்டு வெளியே ஓடி வந்து தனது மகன் மற்றும் உறவினர்களிடம் நடந்தது பற்றி கூறி அழுது புலம்பியுள்ளார். பின்னர், அப்பெண் இதுகுறித்து திருக்கழுக்குன்றம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், வழக்குப்பதிவு செய்த போலீசார், ஜோதிடர் பார்த்தசாரதியை கைது செய்து, திருக்கழுக்குன்றம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, செங்கல்பட்டு சிறையில் அடைத்தனர்.
