சூளகிரி, செப்.22: சூளகிரி வாணியர் தெருவில், அரசு நிலத்தை பாமக நிர்வாகி ஆறுமுகம் என்பவர் ஆக்கிரமித்து பழைய இரும்பு கடை நடத்தி வந்தார். இதுகுறித்து பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில், அந்த இடத்தை விட்டு வெளியேறக் கோரி மாவட்ட நிர்வாகம் சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டது. ஆனால், அவர் அங்கிருந்து வெளியேறாமல் பாமக கொடி கம்பத்தை நிறுவினார். இதையறிந்த அதிகாரிகள், நேற்று முன்தினம் ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்றனர். அப்போது ஆறுமுகம், ஒருநாள் அவகாசம் கேட்டதால், கட்டிடத்தை பாதியளவு அகற்றி விட்டு திரும்பினர். இந்நிலையில், நேற்று காலை, சூளகிரி தாசில்தார் அனிதா, இன்ஸ்பெக்டர் ரஜினி, ஆர்ஐ ரமேஷ் உள்ளிட்டோர் முன்னிலையில், ஆக்கிரமிப்புகள் முழுவதுமாக அகற்றப்பட்டு, அரசுக்கு சொந்தமான இடம் என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது.