கரூர், ஜூலை 29: கரூர் மாநகராட்சிக்குட்பட்ட ராயனூர் பகுதியில் மக்கள் நலன்கருதி கூடுதலாக ஷேர் ஆட்டோ வசதியை அதிகப்படுத்த வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது, கரூர் மாநகராட்சிக்குட்பட்ட தாந்தோணிமலைக்கு அடுத்ததாக வளர்ந்து வரும் பகுதிகளில் ஒன்றாக ராயனூர் பகுதி உள்ளது. இந்த பகுதியில் வசிக்கும் நூற்றுக்கணக்கான மக்கள் தினமும் வேலைக்கு செல்வதற்கு கரூர் மாநகரம் போன்ற பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.
ஆனால், ராயனூர் வழியாக கரூர் உட்பட பல்வேறு பகுதிகளுக்கு பேருந்து வசதி மிகவும் குறைவாகவே உள்ளது. இதனால், பஸ் நிறுத்தங்களில் பயணிகள் நீண்ட நேரம் காத்திருந்து செல்லும் நிலையில் உள்ளனர். அவ்வாறு காத்துநின்றாலும் அடுத்து வரும் பேருந்துகளில் கூட்டம் காரணமாக அனைவரும் ஒரே நேரத்தில் ஏறமுடிவதில்லை. இதனால் உரிய நேரத்திற்கு வேலைக்கு செல்ல முடிவதில்லை. இதனால் சிலர் வீட்டிற்கு திரும்பி செல்லும் நிலை இருந்து வருகிறது.