தர்மபுரி, ஜூன் 4: காரிமங்கலம் அருகே செல்லனஅள்ளியைச் சேர்ந்தவர் கதிரியம்மாள்(62). இவரது கணவர் சின்னசுப்பு, கடந்த சில ஆண்டுக்கு முன்பு இறந்துவிட்டார். மகன் பெங்களூருவில் உள்ள தனியார் கம்பெனியில் பணியாற்றி வருகிறார். இதனால், கதிரியம்மாள் வீட்டில் தனியாக உள்ளார். தினமும் மாலை நேரத்தில் பக்கத்து வீட்டுக்கு சென்று, கதிரியம்மாள் டிவி பார்த்து விட்டு, இரவு வீட்டுக்கு வருவது வழக்கம். கடந்த 1ம் தேதி இரவு, பக்கத்துக்கு வீட்டில் டிவி பார்த்துவிட்டு கதிரியம்மாள் வீடு திரும்பினார். அப்போது, வீட்டிற்குள் இருந்து 3பேர் ஓட்டம் பிடித்ததை கண்டு திடுக்கிட்டார். உடனே, உள்ளே சென்று பார்த்தபோது பீரோ திறந்து கிடந்தது. அதிலிருந்த 6.75 பவுன் தங்க நகை, 2 வெள்ளி கொலுசு, ₹55 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை காணவில்லை. இதுகுறித்த புகாரின்பேரில், காரிமங்கலம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.