கோவை மே 26: கோவை ராமநாதபுரம் பகுதியை சேர்ந்த 25 வயதான வாலிபர் ஒருவர் நேற்று இரவு அதே பகுதியில் நொய்யல் பாலம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பெண் போன்ற தோற்றத்தில் இருந்த ஒருவர் சைகை காட்டி வாலிபரை அழைத்தார். அவரும் அங்கே சென்று பார்த்தார். அப்போது அங்கே 4 பேர் நின்று கொண்டிருந்தனர். ஜாலியாக பேசிக்கொண்டு இருக்கலாம் என கூறி அந்த வாலிபரை அவர்கள் அழைத்து சென்றனர். மறைவான இடத்துக்கு அழைத்து சென்ற அவர்கள் வாலிபரை சரமாரியாக தாக்கினர்.
அவர் வைத்திருந்த பணம் மற்றும் செல்போனை பறித்துக் கொண்டனர். உடலில் லேசான காயங்களுடன் தப்பி வந்த அந்த வாலிபர் ராமநாதபுரம் போலீசில் புகார் அளித்தார். இதைத்தொடர்ந்து போலீசார் அங்கு சென்று தாக்குதல் நடத்திய நபர்களை தேடி பார்த்தனர். ஆனால் அங்கே யாரும் இல்லை. ராமநாதபுரம் நஞ்சுண்டாபுரம் ரோடு மேம்பாலம் பகுதி என பல்வேறு இடங்களில் நடு இரவில் தனியாக நடந்து செல்லும் வாலிபர்களை சிலர் நைசாக பேசி அழைத்து சென்று தாக்குதல் நடத்தி பணம் பறிப்பதாக புகார் குவிந்து வருகிறது. ரோந்து போலீசார் அந்த பகுதியில் ரோந்து பணி நடத்தி தாக்குதல் நடத்தும் கும்பல்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.