ஊட்டி, மே 13: ஊட்டியில் நேற்று காலை முதல் சாரல் மழை பெய்ததால் குளிர் அதிகமாக காணப்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் ஆண்டு தோறும் ஜூன் மாதம் துவங்கி இரு மாதங்கள் தென்மேற்கு பருவமழை பெய்யும். பின், நவம்பர் மாதம் துவங்கி இரு மாதங்கள் வடகிழக்கு பருவ மழை பெய்யும். அதன்பின், மழை இருக்காது. மே மாதம் வரை வெயில் காணப்படும். ஆனால், இம்முறை கடந்த மாதம் முதல் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. கடந்த ஒரு வாரமாக நீலகிரி மாவட்டத்தில் எந்நேரமும் மேக மூட்டம் காணப்படுகிறது. மேலும், அவ்வப்போது இடியுடன் கூடிய கன மழையும் பெய்து வருகிறது. கடந்த இரு நாட்களாக நீலகிரி மாவட்டத்தில் காற்றும் வீசி வருகிறது. இதனால், வெயிலின் தாக்கம் முற்றிலும் குறைந்து குளிர் அதிகரித்தது.