தர்மபுரி, மார்ச் 26: எல்லை பாதுகாப்பு படையில் பெண்கள் சேர வலியுறுத்தி, புல்லட் வாகனத்தில் விழிப்புணர்வு பிரசார பயணம் மேற்கொண்டுள்ள இந்திய எல்லை பாதுகாப்பு படை பெண் வீரர்களுக்கு தர்மபுரியில் உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.
இந்திய எல்லை பாதுகாப்பு படையில் மகளிர் அதிக அளவில் இணைந்து பணியாற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி, விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், இந்திய எல்லை பாதுகாப்பு படையின் பெண் வீரர்கள் குழுவினர் இருசக்கர வாகன பயணம் மேற்கொண்டு வருகிறனர். இந்திய வடபகுதி எல்லையான வாகாவில் தொடங்கிய இந்த விழிப்புணர்வு பயணம், கன்னியாகுமரி சென்று சென்னையில் நிறைவடைய உள்ளது. இந்த விழிப்புணர்வு பயணக் குழுவினர் நேற்று முன்தினம் மாலை தர்மபுரி வந்தடைந்தனர். அவர்களுக்கு மாவட்ட எல்லையில் பொதுமக்கள், கல்லூரி மாணவ மாணவிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர். கடந்த 5ம் தேதி வாகா எல்லையில் தொடங்கிய பிரசார பயணம் சுமார் 6 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்தை கடந்துள்ளது.