ஊட்டி: கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், தாவரவியல் பூங்கா மற்றும் சுற்றுலா தலங்களில் தடுப்பூசி முகாம்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா மூன்றாம் அலை துவங்கியுள்ளது. தற்போது, கொரோனா மற்றும் ஒமிக்ரான் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. தமிழகத்திலும் பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்துக் கொண்டே செல்கிறது. இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தியுள்ளது. மேலும், மக்கள் அதிகம் கூடாத வகையில் வழிபாட்டு தலங்கள் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மூடப்பட்டுள்ளது. இதுதவிர, பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு கொரோனா பரவலை கட்டுப்படுத்தி வருகிறது. நீலகிரி மாவட்டத்திலும் தற்போது கொரோனா கட்டுப்படுத்தலில் மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் மும்முரம் காட்டி வருகின்றனர். கொரோனா பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.