தர்மபுரி, டிச.16: சுப்ரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 2.40 லட்சம் மெட்ரிக் டன் கரும்பு அரவை செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக, அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேசினார். தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டியில் சுப்ரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலையின் 2021-2022ம் ஆண்டு அரவை தொடக்க விழா நேற்று நடந்தது. தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இதனை தொடங்கி வைத்தார். கலெக்டர் திவ்யதர்சினி தலைமை வகித்தார். எம்எல்ஏக்கள் கோவிந்தசாமி, சம்பத்குமார் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சியில், அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேசியதாவது: தர்மபுரி மாவட்டத்தில் இந்த ஆண்டு 7215 ஏக்கரில் கரும்பு பதிவு செய்யப்பட்டு, 2.40 லட்சம் மெட்ரிக் டன் கரும்பு அரவை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. 2020-2021 அரவைப்பருவத்தில் 10.12 சதம் சர்க்கரை கட்டுமானம் எய்தியதின் அடிப்படையில், நடப்பாண்டில் அரவை செய்யப்படும் கரும்புக்கு டன் ஒன்றுக்கு ₹2,929 வழங்கப்படும். மேலும், கடந்த 2020-2021ம் ஆண்டு அரவை பருவத்தில் ஆலைக்கு கரும்பு சப்ளை செய்த அங்கத்தினர்களுக்கு, தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள கரும்பு உற்பத்தி ஊக்கத் தொகை மற்றும் சிறப்பு உற்பத்தி ஊக்கத் தொகை, டன் ஒன்றுக்கு ₹192.50 வீதம் சம்பந்தப்பட்ட 1538 அங்கத்தினர்களின் வங்கி கணக்கிற்கு நேரடியாக ₹200.18 லட்சம் அனுப்பப்பட உள்ளது. கரும்பு தோட்டங்களிலிருந்து ஆலை அரவைக்கு கரும்பு கொண்டு வந்து சேர்க்கும் பணியில் 95 லாரிகளும், 74 டிராக்டர்களும், 35 டிப்பரும், 17 மாட்டு வண்டிகளும் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.