ஓடையில் மூழ்கி பள்ளி மாணவி பலி

நல்லம்பள்ளி, டிச.5: தொப்பூர் அருகே துணி துவைக்க சென்ற போது, ஓடையில் மூழ்கி பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.தொப்பூர் அடுத்த சோழியானூர் பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல். இவர் தனது மனைவியுடன், ஆந்திராவில் தங்கி கூலி வேலை செய்து வருகிறார். இவரது மகள் பிரியங்கா(12), சோழியனூரில் பாட்டியுடன் தங்கியிருந்து அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வந்தாள். நேற்று முன்தினம் வீட்டின் அருகே உள்ள ஓடையில் துணி துவைப்பதற்காக சென்றாள். அப்போது, எதிர்பாராத விதமாக ஓடைக்குள் தவறி விழுந்து அடித்துச் செல்லப்பட்டாள். அவளது அலறல் சத்தம் கேட்டு, அக்கம்-பக்கத்தினர் மீட்க முயன்றனர். ஆனால், அதற்குள் பிரியங்கா தண்ணீரில் மூழ்கி விட்டாள்.

இதுகுறித்த தகவலின்பேரில், தொப்பூர் போலீசார் மற்றும் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று, மீட்பு பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேர தேடுதல் வேட்டைக்கு பின்னர்,  இரவு நேரத்தில் பிரியங்கா சடலமாக மீட்கப்பட்டாள். உடலை கைப்பற்றிய போலீசார், பிரேதப் பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். துணி துவைக்க சென்ற இடத்தில். ஓடையில் மூழ்கி பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம், அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: