கோவை, டிச. 5: கோவை மாநகராட்சி பகுதிகளில் 51.35 கி.மீ தூரம் சாலை அமைக்க ரூ.34.93 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என மாநகராட்சி கமிஷனர் கூறினார். கோவை மாநகராட்சி தெற்கு மண்டல பகுதிகளில் மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால் சுன்கரா நேற்று முன்தினம் ஆய்வு மேற்கொண்டார். 90-வது வார்டுக்கு உட்பட்ட ஐஸ்வர்யா நகர் பகுதியில் உள்ள மாநகராட்சி பூங்கா மற்றும் சிறுவர் விளையாட்டு திடலை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்பகுதியில் உள்ள குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகிகளிடம், பூங்கா பராமரிப்புக்கான சாவியை ஒப்படைத்தார். தொடர்ந்து, 87வது வார்டுக்கு உட்பட்ட வசந்தம் கார்டன், பிருந்தாவன் நகர், கங்கா நகர் பகுதிகளில் சாலையில் தேங்கியுள்ள மழைநீரை மின் மோட்டார்கள் மூலம் அப்புறப்படுத்தும் பணிகளை பார்வையிட்டார். பிறகு, 94வது வார்டுக்கு உட்பட்ட குறிச்சி, மாச்சம்பாளையம் பகுதியில் உள்ள அரசு மேல்நிலை பள்ளியில் தேங்கியுள்ள மழைநீரை அகற்றி, குறிச்சி குளத்திற்கு கொண்டு செல்வதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ள பணிகளையும் பார்வையிட்டார்.