கோவை, டிச. 3: கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உக்கடம் பேருந்து நிலையத்தில் ‘ரேண்டம்’ அடிப்படையில் மாதிரிகள் சேகரிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கோவை உக்கடம் பேருந்து நிலையத்திலிருந்து பாலக்காடு, திருச்சூர் உள்ளிட்ட கேரள நகரங்களுக்கு பேருந்துகள் நேரடியாக இயக்கப்பட்டு வருகின்றன. கேரள மாநில பேருந்துகளும் கோவைக்கு வந்து செல்கின்றன. இந்நிலையில் கோவை மாநகராட்சி சார்பில் கொரோனா பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கேரளாவிலிருந்து பேருந்துகள் மூலமாக உக்கடத்திற்கு வரும் பயணிகள், கோவையிலிருந்து கேரளா செல்லும் பயணிகளுக்கு கோரோனா பரிசோதனைக்கான மாதிரிகள் சேகரிக்கும் பணி நேற்று நடைபெற்றது.