உயர் அதிகாரி போல் பேசி வங்கி கணக்கில் இருந்து ரூ.32 ஆயிரம் சுருட்டல்

கரூர், ஏப்.14: கரூர் மாவட்டம் வாங்கல் அடுத்துள்ள அக்ரஹாரம் பகுதியை சேர்ந்தவர் நாகராஜன்(36), கூலித்தொழிலாளி. இவர், வாங்கல் காவல் நிலையத்தில் அளித்த புகாரில் தெரிவித்துள்ளதாவது: அரசுடைமையாக்கப்பட்ட வங்கியில் 2 கிரடிட் கார்டு பெற்றுள்ளதாகவும், அந்த கிரடிட் கார்டுடன் இணைக்கப்பட்டிருந்த செல்போன் எண்ணுக்கு நேற்று முன்தினம் காலை, அரசுடைமையாக்கப்பட்ட வங்கியில் இருந்து, கிரிடிட் கார்டு பிரிவின் தலைமை அதிகாரி பேசுவதாக ஒருவர் பேசினார்.

அப்போது, கிரடிட் கார்டின் ரிவார்டு புள்ளிகளை ரொக்கமாக மாற்றித் தருவதாகவும், உங்களின் செல்போனுக்கு வந்த ரகசிய குறியீட்டு எண்ணை தெரிவிக்க வேண்டும் எனவும் கூறினார். இதனையடுத்து, ரகசிய குறீயிட்டு எண்ணை சொன்ன சில நிமிடங்களிலேயே, வங்கி கணக்கில் இருந்து முதற்கட்டமாக, ரூ.26,882ம், 2வது கட்டமாக ரூ.6,050ம் எடுக்கப்பட்டு விட்டது. எனவே, இது குறித்து விசாரணை நடத்தி பணத்தை திரும்ப பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தார். இந்த புகாரின் பேரில் வாங்கல் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: