அரூர், ஏப்.9: அரூர் பகுதிகளில் பனைமரங்களை வெட்டி, செங்கல் சூளைகளில் விறகுக்காக அனுப்பும் அவலம் உள்ளது.தமிழக அரசின் மாநில மரமான பனைமரத்தின் அனைத்து பகுதிகளும் பயன் தரும். கடும் வறட்சியையும் தாங்கி வளரக்கூடிய இம்மரத்தின் வேர் முதல் மட்டை வரை அனைத்து பகுதிகளும் பல்வேறு பயன்களை தருகின்றன. கடந்த 50 ஆண்டுளுக்கு முன்பு தமிழகத்தில் 30 கோடி பனைமரங்கள் இருந்தன. ஆனால், தற்போது தமிழகத்தில் 5 கோடி பனை மரங்களே உள்ளன. இவற்றுள் 50 சதவீத மரங்கள் நெல்லை, ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ளது. பனை மரமானது ஓராண்டில் 150 லிட்டர் பதநீர் தரும். பனைமரங்களின் பகுதிகளை கொண்டு தயாரிக்கப்படும் பொருட்களை அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ், ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதன் மூலம், இந்தியாவிற்கு ஆண்டுதோறும் ₹200 கோடிக்கும் மேல் அந்நிய செலாவணி வருவாய் கிடைக்கிறது.