காரிமங்கலம், மார்ச் 29: காரிமங்கலம் பைபாஸ் சாலையை சேர்ந்தவர் தேவகி. ஓய்வு பெற்ற வட்டார வளர்ச்சி அலுவலரான இவர், குடும்பத்துடன் பங்குனி உத்திரத்தையொட்டி கிருஷ்ணகிரி மாவட்டம் தேவிரஅள்ளியிலுள்ள முருகன் கோயிலுக்கு சென்றிருந்தார். இந்நிலையில், நேற்று மதியம் அவரது வீட்டில் திடீரென புகை மண்டலம் ஏற்பட்டது. இதை பார்த்த அக்கம்பக்கத்தினர், தீயை அணைக்க முயன்றும் முடியவில்லை. இது குறித்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த பாலக்கோடு தீயணைப்பு வீரர்கள், தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர். இந்த தீவிபத்தில் வீட்டிலிருந்த பொருட்கள் எரிந்து நாசமானது. மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இதுகுறித்து காரிமங்கலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.