நிலக்கோட்டை, ஜூலை 28: நிலக்கோட்டையில் சாலையோரம் ஆக்கிரமித்து திடீரென கட்டப்பட்ட கடையை போலீசார் அகற்றினர். நிலக்கோட்டை பேரூராட்சியில் சாலையோர ஆக்கிரமிப்புகள் தொடர்பாக புகார் எழுந்தது. இந்நிலையில் நேற்று முன் தினம் பேரூராட்சி அலுவலகம் அருகே நிலக்கோட்டை – செம்பட்டி சாலை பகுதியில் உள்ள அரசு நிலத்தை சிலர் திடீரென ஆக்கிரமித்தனர். அங்கு, கடை அமைப்பதற்கான கட்டுமான பணியில் விறுவிறுப்பாக ஈடுபட்டனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் பேரூராட்சி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
பின்னர், நிலக்கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் விரைந்து வந்து, கடை கட்டிட பணிகளில் ஈடுபட்ட நபர்களிடம் உரிய அனுமதி உள்ளதா என விசாரணை நடத்தினர். ஆனால், அவர்கள் உரிய பதில் அளிக்காததால் ஆக்கிரமிப்பு பொருட்களை அகற்றினர். மேலும், ஆக்கிரமிப்பாளர்களை அங்கிருந்து கலைந்துபோக செய்தனர்.
