காங்கயம், ஜூலை 28: காங்கயத்தில் டாஸ்மாக் கடைகளில் உள்ள பார்களில் விதிகளை மீறி அதிகாலை முதலே மது விற்பனை குறித்து காவல்துறை எண் 100க்கு தகவல் தெரிவித்தும் போலீசார் கண்டுகொள்ளவில்லை என பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 10 டாஸ்மாக் மதுக்கடைகள் உள்ளன. இதில் ஒரு சில டாஸ்மாக் கடைகளை தவிர பெரும்பாலான கடைகளில் பார் வசதியுள்ளது. டாஸ்மாக் கடைகள மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்படுகிறது. ஆனால் சில கடைகளில் உள்ள பார்களில் 24 மணிநேரமும் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுகிறது. தமிழக அரசு பள்ளி, கல்லூரி, கோயில் அருகே உள்ள மற்றும் லைசென்ஸ் இல்லாத 717 டாஸ்மாக் கடைகளை மூடியது. மீதமுள்ள டாஸ்மாக் கடைகள் நிபந்தனைகளுடன் செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில் டாஸ்மாக் கடைகளில் உள்ள பார்கள் அரசு உத்தரவுகளை மீறி செயல்படுகிறது. இதனால் மதுபிரியர்கள் நேர வரையறை இன்றி மது அருந்தும் சூழலும், அவர்களின் குடும்ப சூழ்நிலையும் பாதிக்கப்படுகிறது. அந்த வகையில் காங்கயம் பகுதியில் எந்த நேரம் வேண்டுமானலும் மது வாங்க கூடிய வகையில் சென்னிமலை சாலையில் நால்ரோட்டில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடை பாரில் மது விற்பனை செய்யப்படுகிறது. இதனால் பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. தமிழக அரசின் உத்தரவை மீறி செயல்படும் இதுபோன்ற கடை மற்றும் பார்களின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். அப்பகுதி மக்கள் இது குறித்து கடந்த ஒரு வாரத்தில் இரண்டு முறை காவல்துறை உதவி எண் 100க்கு போன் செய்து புகார் அளித்துள்ளனர்.
ஆனால் தற்போது வரை காங்கயம் பகுதி போலீசார் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஏமாற்றமடைந்த பொதுமக்கள் தமிழ்நாடு முதல்வருக்கு புகார் மனுவை அனுப்ப உள்ளனர்.
