மதுரை, ஜூலை 28: மதுரை கோட்டநத்தம்பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வி துறை சார்பில் மண்டல அளவிலான கபடி போட்டி நடைபெற்றது. இதில் மண்டலத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 15க்கும் மேற்பட்ட பள்ளி அணிகள் பங்கேற்றன. இதில் 14 வயதிற்குட்பட்ட மாணவிகள் பிரிவில் திருவாதவூர் அரசு மேல்நிலைப்பள்ளி அணி அரையிறுதி போட்டியில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறியது.
தொடர்ந்து நடைபெற்ற இறுதி போட்டியில் துவக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய திருவாதவூர் அணி 28:19 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது. வெற்றி பெற்ற அணியினருக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் தண்ணாயிரமூர்த்தி கோப்பையை வழங்கி பாராட்டினார். மேலும், அணிக்கு சிறப்பான பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர் வரதராஜன்,வழிகாட்டி ஆசிரியர் பரக்கத் நிஷா ஆகியோருக்கு பள்ளி நிர்வாகம் சார்பில் வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டன.
