தேனி கொட்டக்குடி ஆற்றில் கழிவுநீருக்கு நடுவே குடிநீர்: பொதுமக்கள் கடும் அவதி

 

தேனி, ஜூலை 28: தேனி நகரின் நடுவே கொட்டக்குடி ஆறு அமைந்துள்ளது. போடிமெட்டு பகுதியில் பெய்யும் மழையில் உருவாகும் காட்டாறு, போடி, தேனி வழியாக அரண்மனைப்புதூரில் முல்லைப பெரியாற்றில் கலந்து வைகை அணையை சென்றடைகிறது. தேனிக்கும் பழனிசெட்டிபட்டிக்கும் இடையே நெடுஞ்சாலைத் துறை பாலம் உள்ளது. இப்பாலத்தின் மேற்கு புறம் தேனி நகருக்கான குடிநீர் ஓவர் ப்ளோ எனப்படும் அதிகபட்ச நீர் வெளியேறக்கூடிய யானைக்குழாய் உள்ளது. இக்குழாயில் இருந்து, எப்போதும் தண்ணீர் வெளியேறுவது வழக்கம். தற்போது கொட்டக்குடி ஆற்றில் நீர்வரத்து இல்லை என்பதால், ஆற்றில் ஆங்காங்கே தேங்கியுள்ள தண்ணீரில் தேனி நகரின் கழிவுநீர் கலந்து சாக்கடையாக மாறியுள்ளது.

இதன் அருகே ஓவர்ப்ளோ குழாய் இருக்கும் நிலையில், அப்பகுதியில் வாழும் பொதுமக்கள் பலரும் வீட்டு உபயோகத்திற்காக இங்கு வந்து தண்ணீர் பிடித்துச் செல்கின்றனர்.இக்குழாய் அருகே சுகாதாரக்கேடு ஏற்படும் வகையில் கழிவுநீர் தேங்கியும், கொசுக்கள் நிறைந்தும் உள்ளது. இதனால் தண்ணீர் தேவைக்காக இங்கு வரும் பொதுமக்களுக்கு நோய்த் தொற்று ஏற்படும் அபாய நிலை உருவாகியுள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம் சுகாதாரக்கேடான முறையில் தேங்கியுள்ள கழிவு நீரை அகற்றவும், தொடர்ந்து ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்..

 

Related Stories: