கரூர் வாங்கல் சாலையில் குப்பை எரிப்பு புகையால் வாகனஓட்டிகள் அவதி

கரூர், மார்ச் 15: கரூர் வாங்கல் சாலையில் அடிக்கடி குப்பைகள் தீயிட்டு எரிக்கப்பட்டு புகை வெளியேற்றத்தால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். கரூர் நகராட்சி பகுதியில் சேகரிக்கப்படும் அனைத்து குப்பைகளும் வாங்கல் சாலையில் உள்ள குப்பை கிடங்கில் கொட்டப்பட்டு தரம் பிரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், குப்பைகள் அதுபோல சேகரித்து கொண்டு செல்லாமல் பரவலாக எரிக்கப்படும் சம்பவங்களும் நகராட்சி பகுதி முழுவதும் நடைபெற்று வருகிறது. இதே போல், வாங்கல் செல்லும் சாலையிலும் குப்பைகள் சேகரிக்கப்பட்டு எரிக்கப்பட்டு வருகின்றன.

இதன் காரணமாக எழும் புகையால் வாகன ஓட்டிகள் சாலையை எளிதில் கடக்க முடியாமல் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். மேலும், சுகாதார சீர்கேடும் ஏற்பட்டு வருகிறது. எனவே, இதுபோன்ற நிகழ்வுகளை தடுத்து நிறுத்த தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என அனைத்து தரப்பினர்களும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Related Stories: