திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி முருகன் கோயில் நிர்வாகம் சார்பில் கடந்த 20-6-2026 தேதியிட்டு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நடைபெறும் கட்டண சேவைகள், அபிஷேக சிறப்பு தரிசனக் கட்டணம் ஆகியவை கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு இருந்த விலைவாசியின்படி கணக்கிடப்பட்டு அப்போதைய நிலையில் கட்டணங்கள் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளன.
தற்போது அதிகளவு உயர்ந்துள்ள விலைவாசி மற்றும் பண வீக்கத்தை கருத்தில் கொண்டும், இத்திருக்கோயிலுக்கு எற்பட்டு வரும் வருவாய்க் குறைவினை ஈடு செய்திடும் வகையிலும் நிர்வாக நலன் கருதியும், தக்கார் தீர்மானத்தின் அடிப்படையிலும் தற்போதுள்ள சேவை கட்டணங்கள் மற்றும் அபிஷேக சிறப்பு தரிசனக் கட்டணம் உயர்வு செய்திட உத்தேசிக்கப்பட்டு உள்ளது.
அதன்படி தங்கத்தேர் இழுப்பதற்கு ரூ.2500ல் இருந்து ரூ.5 ஆயிரமாக உயர்த்திடவும், சண்முகர் அர்ச்சனை செய்ய ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ.30 ஆயிரமாக உயர்த்திடவும், மூலவர் அபிஷேகம் ரூ.1500ல் இருந்து ரூ.10 ஆயிரமாகவும் (2 நபர்கள் அபிஷேக தரிசனம் சேர்த்து), 9 கால பூஜை ரூ.1500ல் இருந்து ரூ.6 ஆயிரத்து 500 ஆக உயர்த்திடவும், சுவாமிக்கு சந்தனக்காப்பு லேபனம் ரூ.100 மற்றும் 15 கிலோ சந்தனக்கட்டை என்பதை ரூ.ஆயிரம் மற்றும் 15 கிலோ சந்தனக்கட்டை ஆகவும், அதேபோல ஏற்கனவே அபிஷேக தரிசனக் கட்டணம் சாதாரண நாட்களில் ரூ.500 ஆகவும், திருவிழா மற்றும் விசேஷ தினங்களில் ரூ.2 ஆயிரமாக இருந்தது.
இதனை அனைத்து நாட்களிலும் ரூ.2 ஆயிரத்து 500 ஆக உயர்த்திடவும் உத்தேசிக்கப்பட்டு உள்ளது. எனவே கட்டண உயர்வு குறித்து பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் தங்கள் கருத்துகளை வரும் ஜூலை 7ம் தேதி மாலை 5.45 மணிக்குள் இணை ஆணையருக்கு அனுப்பி வைக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து இணை ஆணையர் அருணாசலத்திடம் விளக்கம் கேட்க தொடர்பு கொண்ட போது அவர் பதிலளிக்கவில்லை.
