சென்னை: தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: அரசியலமைப்பின் அடிப்படைக் கூடத் தெரியாமல் அமைச்சராகியுள்ள சி.டி.ஆர். நிர்மல் குமார், ’மோடி, அமித்ஷா ஆகியோர் தங்கள் சொந்தக்காரர்களைக் கூட ஆளுநர்களாக நியமிக்கலாம்’ என பத்திரிக்கையாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். இது கடும் கண்டனத்திற்குரியது.
பாரத மக்களையே தனது குடும்பமாக எண்ணி, பல பத்தாண்டுகளாக மக்கள் சேவையில் தன்னை அர்ப்பணித்து வாழும் பிரதமர் மோடி மற்றும் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரின் மாண்பை குறைக்கும் வகையில் நீங்கள் வைத்துள்ள பொறுப்பற்ற விமர்சனங்கள், உங்கள் அரசியல் அறிவின்மையையே வெளிச்சம் போட்டு காட்டுகிறது. தங்கள் ஆட்சியில் சீரழிந்து கிடக்கும் சட்டம் ஒழுங்கு, பெருகி வரும் பாலியல் குற்றங்கள், வன்முறைகள், சொந்த கட்சியினரின் அட்ராசிட்டிகள் உள்ளிட்டவைகளை மறைத்து மக்களை மடைமாற்றுவதற்கு, வெறுப்பரசியலை கையிலெடுக்கிறீர்கள்.
எனவே, அரசியலிலும், கல்வியிலும், மக்கள் சேவையிலும் அனுபவம் வாய்ந்தவர்களை கவர்னர்களாக நியமித்து வரும், பிரதமர் மீது இப்படியொரு கீழ்த்தரமான விமர்சனத்தை வைத்ததற்கு நீங்கள் பொதுமக்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். அரசு பதவியில் இருக்கும் நீங்கள் இனியும் இதுபோன்ற ஆதாரமற்ற அரைகுறை விமர்சனங்களை தவிர்க்க வேண்டுமெனவும் வலியுறுத்துகிறேன்.
மேலும், ஆட்சியமைத்த பிறகு கவர்னரே தேவையில்லை என வெட்டி வீராப்பு காட்டும் நீங்கள், தேர்தலில் தனிப்பெரும்பான்மை கிடைக்காமல், ஆட்சியமைக்க முடியாமல் எத்தனை முறை கவர்னர் மாளிகைக்கு சென்றீர்கள்?. ஆட்சியமைப்பதற்காக தொலைபேசியில் யார் யாரையெல்லாம் தொடர்பு கொண்டீர்கள் என்ற பட்டியலை நான் வெளியிடட்டுமா? எனவே, இனியும் இதுபோன்ற அரசியல் ஸ்டண்ட்களை செய்யாதீர்கள் அமைச்சரே. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
