அமோனியா வாயு கசிவால் உயிரிழந்த 4 பேரின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு பின்னர் ஒடிசா அதிகாரியிடம் ஒப்படைப்பு: திருவள்ளூரில் பரபரப்பு

சென்னை: அமோனியா வாயு கசிவால் உயிரிழந்த 4 பேரின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு பின்பு ஒடிசா அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டது. பெரியபாளையம் அடுத்து கன்னிகைபேரில் இறால் ஆலையில் அமோனியா வாயு கசிவால் 69 தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டனர். அவர்களில் திருவள்ளூர் மாவட்டம், மஞ்சங்காரணையில் உள்ள வேல்ஸ் மருத்துவமனையில் 27 பேரும், வெங்கடேஸ்வரா மருத்துவமனையில் 18 பேரும், சென்னை ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் 11 பேரும், சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் 13 பேரும் என மொத்தம் 69 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதில் வேல்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 2 பேர், குணடைந்து சிகிச்சை முடிந்து திரும்பி உள்ளனர். நேற்று காலை நிலவரப்படி இதுவரை 9 பேர் சிகிச்சை பலனின்றி பலியாகி உள்ளனர். இதில் வேல்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 3 பேரும், வெங்கடேஸ்வரா மருத்துவமனையில் ஒருவரும், ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 2 பேரும், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 3 பேரும் என நேற்று நிலவரப்படி 9 பேர் பலியாகி உள்ளனர்.

அதன்படி வேல்ஸ் மற்றும் வெங்கடேஸ்வரா மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ஜூமானி ஜூவாங்கா (19), புல்மோனி ஜூவாங்கா (23), ஷிபானி (22), சம்பாபதி ஜூவாங்கா (23) ஆகியோரின் உடல்கள் திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, உடல்கள் எம்பாமிங் செய்து முடிக்கப்பட்டது.

முடிக்கப்பட்ட உடல்கள் ஒடிசா மாநில அதிகாரிகள் மற்றும் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மூலம் அடையாளம் காணப்பட்டு, உடல்களை ஒடிசா கொண்டு சென்று ஒப்படைக்க தயார் செய்யப்பட்டு இருந்தது. இந்நிலையில் உடல்களை ஒப்படைப்பதில் தாமதம் ஏற்பட்டதை தொடர்ந்து, ஒடிசா மாநில தொழிலாளர் நலத்துறை அதிகாரி சவுமியா நிரஞ்சனிடம், திருவள்ளூர் வருவாய் கோட்டாட்சியர் சு.ரவிச்சந்திரன் 4 சடலங்களையும் ஒப்படைத்தார்.

உயிரிழந்த புலம்பெயர் தொழிலாளர்கள் உடலுக்கு அரசு தரப்பில் எந்தவித மரியாதையும் செய்யவில்லை.தொடர்ந்து பிரேத பரிசோதனை செய்யப்பட்ட 4 சடலங்களையும், ஆம்புலன்ஸ் மூலமாக சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியில் செயல்படும் சடலங்கள் ஏற்றுமதி செய்யும் தனியார் நிறுவனத்திற்கு ஆம்புலன்ஸ் மூலமாக கொண்டு செல்லப்பட்டது.

Related Stories: