சென்னை: தற்போது சிபிஎஸ்இ விடைத்தாள் பிரச்னை மற்றும் நீட் மறுதேர்வால் மருத்துவக் கலந்தாய்வு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால், பொறியியல் கலந்தாய்வை தள்ளிவைக்க வேண்டிய கட்டாய சூழலுக்கு தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் தள்ளப்பட்டுள்ளது. பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் வருகிற 29ம் தேதி வெளிடப்பட இருந்த நிலையில் அதனை ஜூலை 1ம் தேதி வெளியிடுவதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சிபிஎஸ்இ.யின் மறுமதிப்பீட்டு மதிப்பெண்கள் கடந்த 21ம் தேதி அன்று வெளிவந்த நிலையில் ஜூன் 29 அன்று வெளியிட இருந்த தரவரிசைப் பட்டியல் 1.7.2026 அன்று வெளியிடப்படும்.மேலும், பொறியியல் சேர்க்கைக்கான கலந்தாய்வு தேதிகளும் அன்று அறிவிக்கப்படும்.
வெளியிடப்படும் தரவரிசைப் பட்டியலில் ஏதேனும் குறைகள் இருப்பின், அவற்றைச் சரிசெய்வதற்கான குறைதீர்ப்பு காலம் 1.7.2026 முதல் 5.7.2026 வரை வழங்கப்படும். இந்த காலகட்டத்தில் மாணாக்கர்கள் தங்களுக்குரிய குறைகளை நிவர்த்தி செய்து கொள்ள, அருகிலுள்ள தமிழ்நாடு பொறியியல் மாணாக்கர் சேர்க்கை சேவை மையங்களை நேரில் அணுகலாம்.
