தர்மபுரி, மார்ச் 9: தர்மபுரி நகராட்சி ஆணையராக பணியாற்றி வந்த சித்ரா, கடந்த 6 மாதத்திற்கு முன் பணி மாறுதலாக சென்னை தாம்பரம் சென்றார். நகராட்சி பொறியாளர் பன்னீர்செல்வம், கூடுதல் பொறுப்பாக கவனித்து வந்தார். இந்நிலையில், கடந்த 4ம் தேதி, தர்மபுரி நகராட்சி ஆணையராக ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் நகராட்சி ஆணையர் தாணுமூர்த்தி (52) நியமிக்கப்பட்டார். தொடர்ந்து நேற்று அவர் பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு அலுவலர்கள், பணியாளர்கள் வாழ்த்து தெரிவித்தனர். புதிய நகராட்சி ஆணையர் தாணுமூர்த்தி கூறுகையில், ‘தர்மபுரி நகராட்சியில் உள்ள 33 வார்டுகளையும் சுகாதாரமாக வைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும். தேங்கியுள்ள குப்பைகளை தினசரி சேகரித்து மக்கும் குப்பை, மக்காத குப்பையாக தரம் பிரிக்க பணிகளை விரைவுப்படுத்தப்படும். குடிநீர் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்,’என்றார்.