கோவை, மார்ச் 2: கோவை மாவட்டத்தில் முதல் நாளான நேற்று 60 வயதிற்கு மேற்பட்ட 774 பேருக்கு கொரோனா தடுப்பூசி நேற்று போடப்பட்டது. நாடு முழுவதும் முதற்கட்டமாக கொரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த ஜனவரி 16-ம் தேதி துவங்கியது. மருத்துவர்கள், செவிலியர்கள், முன்களப்பணியாளர்கள், காவல்துறையினர், வருவாய்த்துறை மற்றும் உள்ளாட்சித்துறை பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதையடுத்து, பொதுமக்களுக்கு தடுப்பூசி போடும் பணி நேற்று முதல் துவங்கியது. இதில், முதற்கட்டமாக 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும், நீரிழிவு உள்ளிட்ட இணை நோய்கள் உள்ள 45 வயது முதல் 60 வயது வரை உள்ளவர்களுக்கும் தடுப்பூசி போடப்படுகிறது. அதன்படி, கோவை மாவட்டத்தில் கோவை, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம் உள்பட 25 அரசு மருத்துவமனைகள் மற்றும் 79 தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி போடும் பணிகள் நேற்று துவங்கியது. காலை முதலே ஆர்வத்துடன் பலர் தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வந்தனர். 60 வயதை கடந்த டாக்டர்கள் கூட தடுப்பூசி போட்டுக்கொண்டனர். கோவை அரசு மருத்துவமனையில் புதிய கட்டிடத்தின் 4-வது மாடியில் தடுப்பூசி போடுவதற்கு சிறப்பு வசதி செய்யப்பட்டுள்ளது. இங்கு வந்தவர்களிடம் கோவிஷீல்டு, கோ-வேக்சின் எந்த தடுப்பூசி வேண்டும் என கேட்டு தடுப்பூசி போடப்பட்டது.