பொள்ளாச்சி, மார்ச் 1: பொள்ளாச்சி காந்தி மார்க்கெட்டில் வாரத்தில் ஞயிறு மற்றும் புதன்கிழமைகளில் நடைபெறும் ஏலநாளில், சுற்றுவட்டார கிராமம் மற்றும் வெளி மாவட்ட பகுதியிலிருந்தும் வாழைத்தார் வரத்து அதிகமாக இருக்கும். அதனை தரத்திற்கேற்றார் போல் விலை நிர்ணயம் செய்யப்பட்டு ஏலம் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. சில மாதத்திற்கு பிறகு, கடந்த பிப்ரவரி மாதம் துவக்கத்திலிருந்து உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து வாழைத்தார் வரத்து அதிகமானது. கடந்த வாரத்தில், வாழைத்தார் வரத்து குறைவாலும், அடுத்தடுத்து முகூர்த்த நாட்கள் இருந்ததால், வாழைத்தாருக்கு அதிக கிராக்கி ஏற்பட்டு, அனைத்து ரக வாழைத்தார்களும் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்பட்டன. நேற்று உள்ளூர் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து வாழைத்தார் வரத்து அதிகமாக இருந்தாலும், விற்பனை மந்தத்தால் குறைவான விலைக்கு ஏலம்போனது. இதில், ஒரு செவ்வாழைத்தார் ரூ.1050க்கும், சாம்ராணி ரூ500க்கும், பூவன்தார் ரூ.450க்கும், ரஸ்தாளி ரூ.450க்கும், மோரீஸ் ரூ.500க்கும், நேந்திரன் ஒரு கிலோ ரூ.26க்கும் என அனைத்து ரக வாழைத்தார்களும், ஒன்றுக்கு ரூ.150 முதல் ரூ.200வரை என குறைவான விலைக்கு ஏலம்போனது என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.